செய்திகள்

மோடியின் வருகையால் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது- மதுரையில் தமிழிசை பேட்டி

Published On 2019-02-13 10:12 GMT   |   Update On 2019-02-13 10:12 GMT
மோடியின் தமிழகம் வருகையால் அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். #tamilisai #modi #parliamentelection

மதுரை:

பாரதீய ஜனதாவின் மகளிர் அணி சார்பில் மதுரையில் இன்று இரு சக்கர வாகன யாத்திரை நடைபெற்றது. மகளிர் அணி தலைவர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த யாத்திரையை கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் நேர்மறை அரசியல் செய்து வருகிறோம். எதிர்வினை ஆற்றுபவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.

அரசியல் ரீதியாக மோடியின் தமிழகம் வருகை திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. கட்சியின் பலம், வளர்ச்சி இதன்மூலம் கூடியுள்ளது. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ஈரோடு வருகிறார். ரவிசங்கர் பிரசாத் நாளை மதுரை வருகிறார். தலைவர்களின் வருகை எங்களுக்கு மகிழ்ச்சியையும், எழுச்சியையும் தருகின்றது.

தமிழகத்தில் அதிக தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். இந்த வெற்றிக்கு கூட்டணியும் அமைப்போம். தேர்தலில் நிச்சயமாக நல்ல சூழல் நிலவும். பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டங்கள், மக்களை சென்றடைந்துள்ளன. இந்த திட்டங்கள் மூலம் வருங்காலத்தில் தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெறும்.

அனைத்து கட்சிகளும் தேர்தலில் தனித்து போட்டியிட்டால் நாங்களும் போட்டியிட தயார்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #modi #parliamentelection

Tags:    

Similar News