செய்திகள்

சேலம் அருகே மொபட் மீது பஸ் மோதி விபத்து- மருத்துவ கல்லூரி மாணவி பலி

Published On 2018-10-13 05:11 GMT   |   Update On 2018-10-13 05:11 GMT
சேலம் அருகே மொபட் மீது தனியார் பள்ளி பஸ் மோதிய விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மற்றொரு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம்:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகள் சுவேதா (வயது 23). கோவை கல்வீரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சுபஸ்ரீ (23).

இவர்கள் இருவரும் சேலம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வந்தனர். பயிற்சிக்காக கொங்கணாபுரம் அருகே உள்ள ரங்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் மொபட்டில் சென்று வந்தனர். வழக்கம் போல நேற்று காலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற அவர்கள் மாலையில் மருத்துவ கல்லூரிக்கு திரும்பினர். அப்போது சுவேதா மொபட்டை ஓட்டினார். சுபஸ்ரீ பின்னால் அமர்ந்திருந்தார்.

மொபட் கொங்கணாபுரம்-மகுடஞ்சாவடி சாலையில் அழகானூர் பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே கொங்கணாபுரம் நோக்கி வந்த தனியார் பள்ளி பஸ் மொபட் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அவர்கள் படிக்கும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுவேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சுபஸ்ரீக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் சக மாணவ-மாணவிகள் கதறி அழுதனர்.

சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News