செய்திகள்

முதுமலை வனப்பகுதியில் சமையல் செய்ய பக்தர்களுக்கு தடை - வனத்துறை எச்சரிக்கை

Published On 2018-02-22 04:36 GMT   |   Update On 2018-02-22 04:36 GMT
நாளை பொக்காபுரம், ஆனைகட்டி சிறியர் ஆகிய ஊர்களில் கோவில்களில் திருவிழா நடைபெறுவதால் வனப்பகுதிக்குள் வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தை தவிர வனப்பகுதியில் தீ மூட்டி சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தமிழகம், கேரளம், கர்நாடக மாநில எல்லையில் உள்ளது முதுமலை புலிகள் காப்பகம். 321 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வனப்பகுதியில் தேக்கு, ஈட்டி, கருமத்தை, சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள், அரிய வகை தாவரங்கள். புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளும் வசித்து வருகின்றன.

இந்நிலையில் இலையுதிர்காலம் தொடங்கி விட்ட நிலையில் இலைகள் உதிர்ந்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் சருகுகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. இது தவிர வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. சருகுகளால் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் தீ தடுப்பு கோடுகள் அமைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் நாளை பொக்காபுரம், ஆனைகட்டி சிறியர் ஆகிய ஊர்களில் உள்ள மாரிம்மன் கோவில்களில் திருவிழா நடைபெறுகிறது. வனத்துக்குள் உள்ள இந்த கோவில்களுக்கு ஆதிவாசிமக்கள் மற்றும் மலைவாசி கிராம மக்கள் வனப்பகுதியில் 4 நாட்கள் கூடாரம் அமைத்து தங்கி விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

வனப்பகுதிக்குள் வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தை தவிர வனப்பகுதியில் தீ மூட்டி சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் சிகரெட் போன்றவை உபயோகிக்கவும் தடை விதித்துள்ளது.

காட்டு தீ ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்த வனத்துறையில் தயார் நிலையில் உள்ளனர். பொக்காபுரம் மாரியம்மன் கோவில் விழாவையொட்டி ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் கோவையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காட்டுதீ குறித்தும், அது ஏற்படாமல் தவிர்க்கவும் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. மீறி தீ மூட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News