செய்திகள்

திருச்சியில் எலக்ட்ரிஷியனை அரிவாளால் வெட்டி சாய்த்த வாலிபர்

Published On 2018-01-19 17:03 GMT   |   Update On 2018-01-19 17:03 GMT
திருச்சியில் இன்று காலை நடுரோட்டில் எலக்ட்ரிஷியனை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபரால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருச்சி:

திருச்சி பெரியமிளகுபாறை நாயக் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் வெங்கடேஷ் (வயது 27), எலக்ட்ரிஷியன். அதே பகுதியை சேர்ந்தவர் மோகன் (27). பொங்கல் பண்டிகையன்று வெங்கடேசுக்கும், மோகனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஆத்திரம் தீராத மோகன், வெங்கடேசுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றார். அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை வெங்கடேஷ் கீரனூர் சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். இதையறிந்த மோகன், வெங்கடேசை கொலை செய்யும் நோக்குடன் பெரிய மிளகுபாறை ஆதி திராவிடர் பள்ளி அருகே கையில் அரிவாளுடன் மறைந்திருந்தார்.

அங்கு வெங்கடேஷ் வந்ததும், அவரை மோகன் வழிமறித்து அரிவாளால் சரமாரி வெட்டினார். அதனை தடுத்த போது வெங்கடேஷின் கையில் வெட்டு விழுந்தது. இருப்பினும் கையில் அரிவாள் வெட்டுடன் அவர் அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் அவரை மோகன் துரத்தி சென்று சரமாரியாக வெட்டினார். நடு ரோட்டில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர்.

இதனிடையே கை, தலையில் அரிவாள் வெட்டுப்பட்டு காயமடைந்த வெங்கடேஷ் நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவர் இறந்து விட்டதாக எண்ணிய மோகன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வெங்கடேசை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு உடனடியாக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தப்பியோடிய மோகனை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Tags:    

Similar News