தூத்துக்குடியில் படகு கவிழ்ந்து மீனவர் பலி - 4 பேர் உயிர் தப்பினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி திரேஸ் புரத்தை சேர்ந்த மீனவர் ஜெசுராஜ் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் லூர்தம்மாள் புரத்தை சேர்ந்த கென்னடி, பூபாலராயபுரத்தை சேர்ந்த சதன், பிரதீப், வெனிலாஸ், லைஸ் டன் ஆகியோர் கடந்த 12-ந் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இந்நிலையில் அவர்கள் மீன்களை பிடித்துவிட்டு மீண்டும் நேற்று இரவு கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் புதிய துறைமுகப்பகுதியில் வந்த போது திடீரென படகில் ஓட்டை விழுந்தது. காற்றும் பலமாக வீசியது. இதனால் தண்ணீர் படகில் சென்று நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் அப்பகுதிக்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் சதன், பிரதீப், வெனிலாஸ், லைஸ்டன் ஆகியோர் மீட்கப்பட்டனர். ஆனால் கென்னடி தத்தளித்த போது அதிக தண்ணீர் குடித்ததால் எதிர்பாராத வகையில் உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலோர காவல் படையினர் எப்படி படகு விபத்துக்குள்ளானது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.