கந்துவட்டி சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும்: முத்தரசன் பேட்டி
மதுரை:
மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் கால்முறிவு ஏற்பட்ட அந்த மாணவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தனியார் பள்ளிகள் மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதில்லை. மதிப்பெண்களுக்கு தான் மதிப்பு அளிக்கின்றனர். மாணவர்களை கண்டிப் பதற்கு சட்டத்தில் இடம் இல்லை. ஆனால் அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கலாம்.
இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நலனை பேணி பாதுகாக்க வேண்டும்.
கந்து வட்டி பிரச்சினையால் நெல்லையில் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது. தற்போது சினிமா தயாரிப்பாளர் பலியாகி உள்ளார்.
தமிழகத்தில் கந்து வட்டி சட்டம் என்பது பெயரளவில் தான் உள்ளது. கந்துவட்டி சட்டத்தை கடுமையாக அமல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.