செய்திகள்

தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டது மன்னிக்க முடியாத குற்றம்: வைகோ கண்டனம்

Published On 2017-11-15 01:47 GMT   |   Update On 2017-11-15 02:24 GMT
இந்திய கடலோர காவல்படையினரே தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டது மன்னிக்க முடியாத குற்றம் என்று வைகோ கூறியுள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இம்மாதம் 13-ந் தேதி அன்று பிற்பகல் 4 மணியளவில், இந்திய கடலோரக் காவல்படையினர், ராமேசுவரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். அதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிச்சை ஆரோக்கியதாஸ் என்பவருக்கு இடது கை மணிக்கட்டுக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த ஜான்சன் என்ற மீனவரின் இடது தோளில் காயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இந்திய கடலோரக் காவல் படையினர் இந்தச் சம்பவத்தை ஒரேயடியாக மறுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றும், மீனவர்களைத் தாக்கவில்லை என்றும் அப்பட்டமான பொய்யைக் கூறி உள்ளனர். இதுவரை இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வதை இந்திய கடற்படை தடுக்க முயன்றது இல்லை, வேடிக்கை பார்த்தது. தற்போது இந்திய கடலோர காவல்படையினரே தமிழக மீனவர்களைத் தாக்கியது மன்னிக்க முடியாத குற்றமாகும்.



தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி யால் சுட்ட இந்திய கடலோரக் காவல்படையினர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து, அவர்களைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News