செய்திகள்

புதுவையில் மீண்டும் மழை: பள்ளி மாணவர்கள் அவதி

Published On 2017-11-10 04:29 GMT   |   Update On 2017-11-10 04:29 GMT
புதுவையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அதன் பிறகு காலை 8 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இதனால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள்.
புதுச்சேரி:

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் புதுவையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இந்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

மேலும் விளை நிலங்களிலும் மழை வெள்ளம் தேங்கி நின்றது. இதனால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் தருவாயில் உள்ளது.

கடந்த 3 நாட்களாக கனமழை பெய்யாமல் அவ்வப்போது சிறு தூறல் மழை மட்டுமே பெய்து வந்தது.

இந்த நிலையில் இன்று காலை முதல் மேகமூட்டமாக இருந்து வந்தது. அதன் பிறகு காலை 8 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. 8.15 மணிக்கு பலத்த மழை கொட்டியது. இதனால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள்.

மேலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தினக்கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி போனார்கள். அது போல் மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மழைநீர் வடியாத நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் தாழ்வான பகுதி குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News