ரெயில் கழிவறை கண்ணாடி மீது கல்வீச்சு- வாலிபரிடம் விசாரணை
- கண்ணாடி உடைக்கப்பட்டது அறிந்த ரெயில்வே அதிகாரிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் ரிஸ்வானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணத்தில் இருந்து காட்பாடி நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.
இதில் ரிஸ்வான் (வயது 22) என்பவர் பொதுப்பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். சிக்னல் காரணமாக மேல்பாக்கத்தில் ரெயில் நின்றது.
வெகு நேரமாக ரெயில் செல்லாததால் பொதுப் பெட்டியில் பயணம் செய்த ரிஸ்வான் ரெயிலில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் முன்பதிவு செய்த பெட்டியின் அருகே சென்றார்.
ரெயில் அங்கிருந்து செல்லாததால் ஆத்திரம் அடைந்த ரிஸ்வான் கீழே இருந்த கல்லை எடுத்து முன்பதிவு பெட்டியின் கழிவறையின் கண்ணாடி மீது வீசியதாக கூறப்படுகிறது. இதில் கழிவறையின் கண்ணாடி உடைந்தது.
சிறிது நேரத்திற்கு பின்பு ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. கண்ணாடி உடைக்கப்பட்டது அறிந்த ரெயில்வே அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ரிஸ்வானை பிடித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ரெயில்வே போலீசார் ரிஸ்வானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.