தமிழ்நாடு செய்திகள்

சென்னை மாநகராட்சியில் இ-டெண்டரில் துண்டுச்சீட்டு ஊழல்! - அன்புமணி குற்றச்சாட்டு

Published On 2026-03-02 13:06 IST   |   Update On 2026-03-02 13:06:00 IST
  • ஒவ்வொரு பணிக்கான ஒப்பந்தமும் மாநகராட்சியால் குறிப்பிடப்பட்டதை விட குறைவான தொகைக்கே வழங்கப்பட்டுள்ளன.
  • ஊழலுக்கான வழிமுறைகளை புகுத்துவது தான் தி.மு.க.வின் வழக்கம் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியில் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் தி.மு.க. அரசு எந்த அளவுக்கு விஞ்ஞானப்பூர்வமான ஊழல்களை செய்து வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. ஒப்பந்தம் வழங்குவதில் வெளிப்படைத் தன்மை என்று ஒருபக்கம் கூறிக் கொண்டு, இன்னொரு பக்கம் கையூட்டு கொடுத்தால் மட்டுமே ஒப்பந்தம் என்ற 'சிஸ்டத்தை' தி.மு.க. அரசும், சென்னை மாநாகராட்சியும் ஏற்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.

ஒவ்வொரு பணிக்கான ஒப்பந்தமும் மாநகராட்சியால் குறிப்பிடப்பட்டதை விட குறைவான தொகைக்கே வழங்கப்பட்டுள்ளன. ஆனால், 2024-ம் ஆண்டில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் மாநகராட்சியால் குறிப்பிடப்பட்டதை விட 7 சதவீதம் முதல் 12.51 சதவீதம் வரை கூடுதல் தொகைக்கு வழங்கப்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டிலும் இதே முறையில் ஊழல் நடைபெற்றுள்ளது.

தி.மு.க. என்றாலே விஞ்ஞானப்பூர்வ ஊழல் தான் என்பதற்கு சர்க்காரியா ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ள கருத்துகளே சாட்சி. விஞ்ஞானப்பூர்வ ஊழல்களை காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய அவதாரத்தில் தி.மு.க. அரசு தொடர்ந்து வருகிறது என்பதற்கு சான்று தான் கள ஆய்வுச் சான்று எனப்படும் துண்டுச்சீட்டு ஊழல்.

ஊழலை ஒழிப்பதற்காக இ-டெண்டர் போன்ற வெளிப்படைத்தன்மை நடைமுறைகள் கொண்டு வரப்பட்டாலும் அதிலும் ஊழலுக்கான வழிமுறைகளை புகுத்துவது தான் தி.மு.க.வின் வழக்கம் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

ஆற்றுமணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை, பணி நியமன ஊழல், பணியிட மாற்ற ஊழல், மதுபான வரி ஏய்ப்பு ஊழல், பாட்டிலுக்கு 10 ரூபாய் ஊழல் என தி.மு.க. ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடிக்கும் கூடுதலாக ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. மக்களுக்கு சேவை செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. மக்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டுவதை அனுமதிக்க முடியாது. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்தின் பிடியிலிருந்து வேண்டுமானால் ஊழல் தி.மு.க. தப்பிக்கலாம். ஆனால், இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளிக்கும் தண்டனையில் இருந்து தி.மு.க. தப்பிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News