வெள்ளம் பாதித்த பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக ஆய்வு
சென்னை:
சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மழைநீர் கால்வாய்களில் பல இடங்களில் அடைப்பு இருந்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மழை பாதித்த இடங்களில் நிவாரணப் பணிகளை மேற் கொள்ள அனைத்து அமைச்சர்களையும் களப்பணி செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதோடு நேற்று முன்தினம் அவரும் வடசென்னையில் பல பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளை பார்வையிட்டார்.
அவரது உத்தரவு காரணமாக மழை தண்ணீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 90 சதவீத இடங்களில் தேங்கிய வெள்ளம் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2-வது நாளாக ஆய்வு செய்தார். கொடுங்கையூர் சென்ற அவர் இணைப்பு கால்வாய் பகுதியை பார்வையிட்டார்.
கால்வாயில் அடைப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் அவற்றை அகற்றும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.