செய்திகள்
விபத்தில் நொறுங்கிய பஸ்-கார்.

அரக்கோணத்தில் பஸ் மோதியதில் கார் நொறுங்கி டிரைவர் பலி: 4 பேர் கவலைக்கிடம்

Published On 2017-11-03 07:37 GMT   |   Update On 2017-11-03 07:38 GMT
அரக்கோணத்தில் இன்று காலை பஸ் மோதியதில் கார் நொறுங்கி டிரைவர் பலியானார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.
அரக்கோணம்:

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் அருள் முருகன் (வயது 35). சொந்தமாக கார் வாங்கி, இவரே டிரைவராகி டிராவல்ஸ் நடத்தி வந்தார். இந்த நிலையில், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த செல்லையா (54) என்பவர் தனது மனைவி கலைச்செல்வி (40) மற்றும் மகன்கள் சதீஷ்குமார் (23), நிதீஷ்குமாருடன் (17) திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்றிரவு அருள் முருகன் காரில் புறப்பட்டார்.

காஞ்சீபுரம்- அரக்கோணம் சாலையில் இன்று காலை கார் வந்துக் கொண்டு இருந்தது. அரக்கோணம் பெருமூச்சி என்ற பகுதியில் வந்தபோது, எதிரே தனியார் பைக் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ் வேலையாட்களை ஏற்றிக் கொண்டு வந்தது. அப்போது காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி உருகுலைந்தது. காரை ஓட்டி வந்த டிரைவர் அருள்முருகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். செல்லையா மற்றும் அவரது மனைவி, மகன்கள் ஆகிய 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்ததும், அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நொறுங்கிய காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய செல்லையா உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு 4 பேரும் மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காருக்குள் சிக்கியிருந்த டிரைவர் அருள் முருகனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News