search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரக்கோணம்"

    அரக்கோணத்தில் பண மழை கொட்டிய ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    அரக்கோணம்:

    ஏ.டி.எம். மையத்தில் நமது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தில் எவ்வளவு ரூபாய் வேண்டும் என்று குறிப்பிடுகிறோமோ? அந்த அளவு ரூபாய் மட்டுமே வரும். ஆனால் அரக்கோணத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக பணம் வந்தது.

    அது பற்றிய விவரம் வருமாறு:-

    வேலூர் மாவட்டம், அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் எஸ்.ஆர். கேட் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்காக அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை போட்டு ரூ.1,000 எடுக்க பட்டனை அழுத்தினார். அப்போது அவருக்கு ரூ.5 ஆயிரம் வந்தது. இதனால் அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. தகவல் அறிந்ததும் 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையம் முன்பு குவிந்தனர். பலர் ஏ.டி.எம். எந்திரத்தில் குறைவான தொகையை குறிப்பிட்டு அதிகமான பணத்தை மகிழ்ச்சியுடன் எடுத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த சிலர் அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏ.டி.எம். மைய வாசலில் இருந்த காவலாளியிடம் ஏ.டி.எம். மையத்தை மூட சொன்னார்கள். மேலும் இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வங்கி அதிகாரிகள் இதுவரை எத்தனை பேருக்கு அதிக அளவில் பணம் அளிக்கப்பட்டு உள்ளது என்பது கம்ப்யூட்டரில் பதிவாகி இருக்கும். அதை வைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். மேலும் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட ஏதேனும் கோளாறு காரணமாக இதுபோன்ற கூடுதல் பணம் வந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    அரக்கோணம் கிளை வங்கியில் உள்ள அலுவலர்கள் இதுகுறித்து சென்னை மற்றும் வேலூரில் உள்ள வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கம்ப்யூட்டர் பொறியாளர்கள் குறிப்பிட்ட ஏ.டி.எம். மையத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.



    தற்காலிகமாக அந்த ஏ.டி.எம்.மில் பணபரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் சரியான விதத்தில் பணம் அளிக்கப்படுகிறதா? என்பதை பலமுறை கணக்கில் எடுத்து அதன்பின்னர் அந்த ஏ.டி.எம். இயங்க அனுமதி அளிக்கப்படும் என்று வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    திடீரென ஏ.டி.எம். எந்திரத்தில் பணமழை கொட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூடுதல் பணம் கிடைக்கும் என்று வந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் மையம் மூடப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    அரக்கோணம் அருகே பைக்கில் லிப்ட் கொடுக்காததால் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கீழ்ஆவதம் காலனி, கோவில் தெருவை சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மகன் தட்சிணாமூர்த்தி (32). சென்னையில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த உறவினர் நாகராஜ் (23) என்பவருடன் பைக்கில் அன்வர்திகான்பேட்டைக்கு சென்றார்.

    மதுரா மாதிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு தட்சிணாமூர்த்தி தயிர் வாங்க கடைக்கு சென்றார். நாகராஜ் பைக் அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் நாகராஜிடம் எங்களை பைக்கில் அன்வர்திகான்பேட்டையில் விட்டுவிடு என்று கேட்டனர்.

    அதற்கு நாகராஜ் பைக் என்னுடையது கிடையாது. நானும், எனது அண்ணனும் ஒரு வேலையாக வந்துள்ளோம். என்னுடைய அண்ணன் கடைக்கு சென்றுள்ளார் என்று கூறினார். அப்போது தட்சிணாமூர்த்தி பைக் அருகே வந்தார்.

    அவரிடம் வாலிபர்கள் லிப்ட் கேட்டனர். அப்போது தட்சிணாமூர்த்திக்கும், 2 வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தட்சிணாமூர்த்தியை குத்தினர்.

    பின்னர் அந்த வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த உளியநல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (23) என்பவரை தாக்கிவிட்டு அவர் ஓட்டி வந்த பைக்கை பறித்துக்கொண்டு 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    கத்தி குத்தில் காயமடைந்த தட்சிணாமூர்த்தியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தட்சிணாமூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் கீழ்ஆவதம் காலனியில் காட்டுத்தீ போல் வேகமாக பரவியது.

    இதனையடுத்து தட்சிணாமூர்த்தியின் உறவினர்கள், நண்பர்கள் கீழ்ஆவதம் காலனி பகுதியில் இருந்து அன்வர்திகான்பேட்டைக்கு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தட்சிணாமூர்த்தியை கொன்ற குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

    அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த தட்சிணா மூர்த்திக்கு ரஞ்சிதா (26) என்ற மனைவியும், மோகன்அஜித் (4) என்ற மகனும், ரெஜினாரெக்ஸ் (2) என்ற மகளும் உள்ளனர்.

    தப்பி சென்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கபட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேர்தலில் வாக்களிக்க பொதுமக்கள் திரண்டு வந்ததால், அவர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #LokSabhaEelctions2019 #Arcot
    அரக்கோணம்:

    பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடந்தது.

    இந்நிலையில், அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு அருகே வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் பொதுமக்கள் திரண்டு வந்ததால், அவர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு அருகே ராசாத்திபுரம் கீழ்விஷாரத்தில் என்ற பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    திடீரென வாக்குச்சாவடி பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது #LokSabhaEelctions2019 #Arcot 
    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு- அரக்கோணத்துக்கு நேரடி புறநகர் சுற்றுவட்ட ரெயில் சேவை 10 நாட்களில் தொடங்குகிறது.
    சென்னை:

    சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த பயணிகள் செங்கல்பட்டு-அரக்கோணத்துக்கு நேரடி புறநகர் சேவையை தொடங்க வேண்டும் என ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடப்பட்டது.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருமால்பூர் உள்ளிட்ட புறநகரில் இருந்து சென்னைக்கு வருவதற்கு பொதுமக்களுக்கு மின்சார ரெயில்கள் வரப்பிரசாதமாக உள்ளது. சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, மூர் மார்க்கெட்-அரக்கோணம், கடற்கரை- அரக்கோணம் மார்க்கங்களில் தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பயணிகள் மூர்மார்க்கெட் அல்லது கடற்கரை, ரெயில் நிலையத்துக்கு வந்து பின்னர் அரக்கோணம் செல்லும் நிலை இருந்து வந்தது. இதனால் கடற்கரை- செங்கல்பட்டு- அரக்கோணம் இடையே சுற்று வட்ட ரெயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வேக்கு பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதற்கான திட்டத்தை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தயார் செய்து ரெயில்வே வாரிய ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது. அதன் பேரில் ரெயில்வே வாரியம் சுற்று வட்ட ரெயில்கள் இயக்க ஒப்புதல் அளித்தது.

    இதைதொடர்ந்து சென்னை கடற்கரை- திருமால்பூர், திருமால்பூர்- கடற்கரை மின்சார ரெயில்கள் அரக்கோணம் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதேபோல் கடற்கரை-காஞ்சிபுரம், காஞ்சிபுரம்- கடற்கரை மின்சார ரெயில்கள் திருமால்பூர் வரை நீட்டிக்கப்படும்.

    தற்போது தக்கோலம்- அரக்கோணம் இடையே ரெயில்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் சுற்றுவட்ட ரெயில் சேவை தொடங்கப்படுகிறது.

    இதனால் புறநகர் பயணிகள் கடற்கரையில் இருந்து நேரடியாக செங்கல்பட்டு- அரக்கோணத்துக்கு எளிதில் செல்ல முடியும். இதனால் புறநகர் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுவது உறுதி என அரக்கோணத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார். #LokSabhaElections2019 #Ramadoss
    அரக்கோணம்:

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி கட்சியின் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து மாம்பழம் சின்னத்தில் வாக்குகள் சேரிக்கும் பிரசார பொதுக்கூட்டம் அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் வேலூர் மாவட்டம் 13 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மிகப்பெரிய மாவட்டமாக இருந்து வருகிறது.

    பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நான் வலியுறுத்துவேன். மேலும் அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுவது உறுதி.



    பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பா.ம.க. நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி பெண்களுக்குத்தான் உள்ளது. பெண்களுக்கு ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து சமூகத்தினருடன் பாசத்துடனும், தோழமை உணர்வுடனும் இருந்து வருகிறது.

    தமிழகத்தில் தி.மு.க. கட்சி கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனராக மு.க.ஸ்டாலினும், நிர்வாக இயக்குனர்களாக அவரது மகன், மருமகன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். மேலும் ஆலோசகர்களாக அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இருந்து வருகின்றனர். அவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொண்டால் தி.மு.க. கட்சி முடிவுக்கு வந்து விடுவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.வேலு மற்றும் அ.தி.மு.க கூட்டணி கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்துதரப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  #LokSabhaElections2019 #Ramadoss


    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LSpolls #Jagathrakshakan
    ஆற்காடு:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.

    பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் 
    பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.



    இந்நிலையில், நேற்று ஆற்காடு மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தாழனூர், கத்தியவாடி, கவரப்பாளையம், ராமாபுரம், ஆயிலம்புதூர், ஆயிலம், கீழ்குப்பம், அருங்குன்றம், சாம்பசிவபுரம், கூரம்பாடி, உப்புப்பேட்டை ஆகிய கிராமங்களில் திற்ந்த வேனில் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.



    அப்போது கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நிசாத் அகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். #LSpolls #Jagathrakshakan 
    அரக்கோணத்தில் நேற்று இரவு மின்சார ரெயில் தாமதத்தால் ஆத்திரமடைந்த பயணிகள் ரெயில் என்ஜின் முன்பாக நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரக்கோணம்:

    சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரெயில் தினமும் இரவு 7.35 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து 7.40 மணிக்கு திருத்தணிக்கு புறப்பட்டு செல்லும்.

    நேற்று 7.35 மணிக்கு வந்த மின்சார ரெயில் அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட பாயிண்ட் கோளாறு காரணமாக 8.50 மணி வரை அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் 100-க்கும் மேற்பட்டோர் ரெயில் என்ஜின் முன்பாக நின்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்பாபு, வெங்கடேசன், ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ரெயில் மறியல் செய்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    தண்டவாளத்தில் பாயிண்ட் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் அரக்கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மின்சார ரெயில் 9.10 மணிக்கு திருத்தணி நோக்கி புறப்பட்டு சென்றது. ரெயில் மறியல் காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம் வரும் 2 மின்சார ரெயில்கள் திருவலங்காடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு காலதாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

    இந்த சம்பவத்தால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    அரக்கோணத்தில் ரெயில் தாமதமாக வந்ததால் பயணிகள் ரெயில்நிலைய அலுவலகத்தை முற்றுகை போராட்டம் செய்தனர்.

    அரக்கோணம்:

    திருத்தணியில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னைக்கு தினமும் காலை 7 மணிக்கு மின்சார ரெயில் சென்றுவருகிறது. இந்த ரெயில் அரக்கோணம் ரெயில்நிலையத்திற்கு 7 மணிக்கு வந்து 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

    இன்று 7 மணிக்கு வழக்கமாக வரவேண்டிய பாசஞ்சர் ரெயில் 7,15 மணிக்கு வந்தது. 15 நிமிடம் காலதாமதமாக வந்துள்ளது. மேலும் அந்த நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்றதால் பாசஞ்சர் ரெயிலை மேலும் 30 நிமிடங்கள் இயக்கபடாமல் நிறுத்தி வைக்கபட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரெயில்நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். நிலைய அதிகாரி மற்றும் ரெயில்வே போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பயணிகள் நாங்கள் தினமும் சென்னைக்கு வேலைக்கு செல்லும்போது அடிக்கடி ரெயில்தாமதமாக செல்கிறது. இதனால் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே ரெயில் காலதாமதத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அதற்கு அதிகாரிகள் ரெயில்காலதாமதத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறோம். இனி இது போல் காலதாமதம் நடக்காது என்று உறிதியளித்தனர். இதையடுத்து பயணிகள் கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் பெங்களூரு, கோவை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
    தக்கோலம்:

    அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் யார்டு அருகே உள்ள தண்டவாளத்தை இரவு 10.15 மணிக்கு ரெயில்வே ஊழியர்கள் சோதனை செய்தபடி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்ட ஊழியர்கள் உடனடியாக அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ஊழியர்கள் தண்டவாள விரிசல் பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    மேலும் அவ்வழியாக வந்த கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், பெங்களூரு மெயில், எர்ணாகுளம் வராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு 12.45 மணியளவில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டு ரெயில்கள் அந்த பகுதியில் மெதுவாக இயக்கப்பட்டது.

    ரெயில்கள் 2 மணி நேரம் நிறுத்தபட்டதால் பயணிகள் குறித்த நேரத்திற்கு சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    அரக்கோணம் அருகே வாலிபர் வி‌ஷம் குடித்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கோலம்:

    அரக்கோணம் அருகே உள்ள வேடல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பழனி இவரது மகன் சத்யா (வயது20). இவர் நேற்று வி‌ஷம் குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்தார்.

    இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து சத்யாவை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா இறந்தார். இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சத்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே பைக் விபத்தில் மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    பாணாவரம் அடுத்த தப்பூர் கிராமத்தை சேர்ந்த அரிராமன் மகன் லோகேஷ் (18) தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் தனது நண்பரை பார்த்துவிட்டு பைக்கில் அரக்கோணம் அடுத்த மின்னல் ‌‌‌கிராமம் சாலையில் வரும்போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

    அந்த வழியாக வந்த சிலர் அவரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். #Vellore #MinisterVeeramani
    வேலூர்:

    வேலூர் மண்டலத்திற்கு ரூ.6 கோடி மதிப்பில் ஒதுக்கப்பட்ட 24 பஸ்களில் 16 பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.

    இதில் மேலும், 8 புதிய பஸ்கள் இயக்க நிகழ்ச்சி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு கொடியசைத்து புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.

    இதில் சென்னையிலிருந்து வேலூர் வழியாக ஓசூருக்கு 3 பஸ்களும், வேலூரிலிருந்து திருச்சிக்கு ஒரு பஸ்சும், வேலூரிலிருந்து ஈரோட்டுக்கு ஒரு பஸ்சும், ஆம்பூரிலிருந்து அம்பத்தூருக்கு ஒரு பஸ்சும், பேரணாம்பட்டிலிருந்து ஆவடிக்கு ஒரு பஸ்சும், குடியாத்தத்திலிருந்து சோழிங்கநல்லூருக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்:- ‘‘வேலூரை 2 மாவட்டமாக பிரிக்க ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேலூர் மாவட்டத்தை வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என 3 மாவட்டமாக பிரித்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை முதல்- அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன். நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்து உள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். #Vellore #MinisterVeeramani
    ×