search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arakkonam"

    அரக்கோணத்தில் பண மழை கொட்டிய ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    அரக்கோணம்:

    ஏ.டி.எம். மையத்தில் நமது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தில் எவ்வளவு ரூபாய் வேண்டும் என்று குறிப்பிடுகிறோமோ? அந்த அளவு ரூபாய் மட்டுமே வரும். ஆனால் அரக்கோணத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக பணம் வந்தது.

    அது பற்றிய விவரம் வருமாறு:-

    வேலூர் மாவட்டம், அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் எஸ்.ஆர். கேட் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்காக அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை போட்டு ரூ.1,000 எடுக்க பட்டனை அழுத்தினார். அப்போது அவருக்கு ரூ.5 ஆயிரம் வந்தது. இதனால் அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. தகவல் அறிந்ததும் 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையம் முன்பு குவிந்தனர். பலர் ஏ.டி.எம். எந்திரத்தில் குறைவான தொகையை குறிப்பிட்டு அதிகமான பணத்தை மகிழ்ச்சியுடன் எடுத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த சிலர் அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏ.டி.எம். மைய வாசலில் இருந்த காவலாளியிடம் ஏ.டி.எம். மையத்தை மூட சொன்னார்கள். மேலும் இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வங்கி அதிகாரிகள் இதுவரை எத்தனை பேருக்கு அதிக அளவில் பணம் அளிக்கப்பட்டு உள்ளது என்பது கம்ப்யூட்டரில் பதிவாகி இருக்கும். அதை வைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். மேலும் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட ஏதேனும் கோளாறு காரணமாக இதுபோன்ற கூடுதல் பணம் வந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    அரக்கோணம் கிளை வங்கியில் உள்ள அலுவலர்கள் இதுகுறித்து சென்னை மற்றும் வேலூரில் உள்ள வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கம்ப்யூட்டர் பொறியாளர்கள் குறிப்பிட்ட ஏ.டி.எம். மையத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.



    தற்காலிகமாக அந்த ஏ.டி.எம்.மில் பணபரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் சரியான விதத்தில் பணம் அளிக்கப்படுகிறதா? என்பதை பலமுறை கணக்கில் எடுத்து அதன்பின்னர் அந்த ஏ.டி.எம். இயங்க அனுமதி அளிக்கப்படும் என்று வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    திடீரென ஏ.டி.எம். எந்திரத்தில் பணமழை கொட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூடுதல் பணம் கிடைக்கும் என்று வந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் மையம் மூடப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    அரக்கோணம் அருகே பைக்கில் லிப்ட் கொடுக்காததால் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கீழ்ஆவதம் காலனி, கோவில் தெருவை சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மகன் தட்சிணாமூர்த்தி (32). சென்னையில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த உறவினர் நாகராஜ் (23) என்பவருடன் பைக்கில் அன்வர்திகான்பேட்டைக்கு சென்றார்.

    மதுரா மாதிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு தட்சிணாமூர்த்தி தயிர் வாங்க கடைக்கு சென்றார். நாகராஜ் பைக் அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் நாகராஜிடம் எங்களை பைக்கில் அன்வர்திகான்பேட்டையில் விட்டுவிடு என்று கேட்டனர்.

    அதற்கு நாகராஜ் பைக் என்னுடையது கிடையாது. நானும், எனது அண்ணனும் ஒரு வேலையாக வந்துள்ளோம். என்னுடைய அண்ணன் கடைக்கு சென்றுள்ளார் என்று கூறினார். அப்போது தட்சிணாமூர்த்தி பைக் அருகே வந்தார்.

    அவரிடம் வாலிபர்கள் லிப்ட் கேட்டனர். அப்போது தட்சிணாமூர்த்திக்கும், 2 வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தட்சிணாமூர்த்தியை குத்தினர்.

    பின்னர் அந்த வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த உளியநல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (23) என்பவரை தாக்கிவிட்டு அவர் ஓட்டி வந்த பைக்கை பறித்துக்கொண்டு 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    கத்தி குத்தில் காயமடைந்த தட்சிணாமூர்த்தியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தட்சிணாமூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் கீழ்ஆவதம் காலனியில் காட்டுத்தீ போல் வேகமாக பரவியது.

    இதனையடுத்து தட்சிணாமூர்த்தியின் உறவினர்கள், நண்பர்கள் கீழ்ஆவதம் காலனி பகுதியில் இருந்து அன்வர்திகான்பேட்டைக்கு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தட்சிணாமூர்த்தியை கொன்ற குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

    அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த தட்சிணா மூர்த்திக்கு ரஞ்சிதா (26) என்ற மனைவியும், மோகன்அஜித் (4) என்ற மகனும், ரெஜினாரெக்ஸ் (2) என்ற மகளும் உள்ளனர்.

    தப்பி சென்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கபட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு- அரக்கோணத்துக்கு நேரடி புறநகர் சுற்றுவட்ட ரெயில் சேவை 10 நாட்களில் தொடங்குகிறது.
    சென்னை:

    சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த பயணிகள் செங்கல்பட்டு-அரக்கோணத்துக்கு நேரடி புறநகர் சேவையை தொடங்க வேண்டும் என ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடப்பட்டது.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருமால்பூர் உள்ளிட்ட புறநகரில் இருந்து சென்னைக்கு வருவதற்கு பொதுமக்களுக்கு மின்சார ரெயில்கள் வரப்பிரசாதமாக உள்ளது. சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, மூர் மார்க்கெட்-அரக்கோணம், கடற்கரை- அரக்கோணம் மார்க்கங்களில் தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பயணிகள் மூர்மார்க்கெட் அல்லது கடற்கரை, ரெயில் நிலையத்துக்கு வந்து பின்னர் அரக்கோணம் செல்லும் நிலை இருந்து வந்தது. இதனால் கடற்கரை- செங்கல்பட்டு- அரக்கோணம் இடையே சுற்று வட்ட ரெயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வேக்கு பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதற்கான திட்டத்தை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தயார் செய்து ரெயில்வே வாரிய ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது. அதன் பேரில் ரெயில்வே வாரியம் சுற்று வட்ட ரெயில்கள் இயக்க ஒப்புதல் அளித்தது.

    இதைதொடர்ந்து சென்னை கடற்கரை- திருமால்பூர், திருமால்பூர்- கடற்கரை மின்சார ரெயில்கள் அரக்கோணம் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதேபோல் கடற்கரை-காஞ்சிபுரம், காஞ்சிபுரம்- கடற்கரை மின்சார ரெயில்கள் திருமால்பூர் வரை நீட்டிக்கப்படும்.

    தற்போது தக்கோலம்- அரக்கோணம் இடையே ரெயில்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் சுற்றுவட்ட ரெயில் சேவை தொடங்கப்படுகிறது.

    இதனால் புறநகர் பயணிகள் கடற்கரையில் இருந்து நேரடியாக செங்கல்பட்டு- அரக்கோணத்துக்கு எளிதில் செல்ல முடியும். இதனால் புறநகர் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    அரக்கோணம், திருப்பத்தூரில் அதிமுக பிரமுகர் வீடுகளில் வருமானவரி துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1¼ கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #ITRaids

    வேலூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

    பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோரது வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோதனை நடைபெற்றது.

    அப்போது தி.மு.க. பிரமுகரின் சிமெண்டு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை மற்றும் நாமக்கல்லில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.11 கோடி பிடிபட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பணமா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

    தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் வருமானவரித் துறை அதிகாரிகள் தங்களது சோதனையை மேலும் தீவிரப் படுத்தி உள்ளனர்.

    அரக்கோணம், திருப்பத்தூரில் அ.தி.மு.க. பிரமுகர் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.1¼ கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கொரட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் அ.தி.மு.க. பிரமுகரான இவர், பைனான்ஸ், சீட்டு, நடத்தி வருகிறார்.

    இவரது வீட்டில் வருமான வரி துறை இணை கமி‌ஷனர் அபிநயா தலைமையில், 9 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

    நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணியளவில் முடிந்தது. இதில் ரூ.26 லட்சம் பணம் சிக்கியது.

     


    இந்த பணத்தை வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கண்ணன் வைத்திருந்தாரா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    அரக்கோணத்தை அடுத்த மின்னல் அருகே உள்ள நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் தீனதயாளன். தொழிலதிபரான இவர் லுங்கி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    பல்வேறு மாநிலங்களில் இருந்து லுங்கிகளை வாங்கி அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவரது உறவினர் மாதவன் அ.தி.மு.க. ஊராட்சி செயலாளராக உள்ளார்.

    நேற்று மாலை 4 மணியளவில் தீனதயாளன் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது. அவரது அலுவலகம், தொழிற்சாலை ஆகியவற்றிலும் சோதனையில் ஈடுபட்டனர். மாதவன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இரவு முழுவதும் நடந்த சோதனை அதிகாலை 2 மணியளவில் முடிந்தது. தீனதயாளன் வீடு, அலுவலகம், தொழிற்சாலை ஆகியவற்றில் இருந்து ரூ.1 கோடியே 1 லட்சமும், மாதவன் வீட்டில் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இந்த நிலையில் பஸ்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.54 லட்சம் பணமும் பிடிபட்டுள்ளது.

    விழுப்புரத்திலிருந்து மேல்மலையனூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஸ்கூல் பேக் கேட்பாரற்று கிடந்தது. அதில் கட்டுக்கட்டாக 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்தது. அனைத்தும் ரூ.500, 200 ரூபாய் நோட்டுகளாக இருந்தன.

    அந்த பணத்தை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இந்த பணத்தை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக யாரேனும் எடுத்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    விளாத்திகுளம் அருகே பஸ்சில் பயணம் செய்த ராமராஜ் என்பவரின் துணிப் பையில் கட்டுக்கட்டாக ரூ.31 லட்சம் பணம் இருந்தது.

    ராமராஜிடம் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணம், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ராமராஜ், அ.தி.மு.க. புதூர் ஒன்றிய செயலாளர் ஞானகுருசாமியின் உறவினர் ஆவார்.

    இதற்கிடையே அரக்கோணம் அருகே உள்ள நெமிலியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

    இதில் நெமிலி முன்னாள் பேரூராட்சி தலைவரான காங்கிரஸ் பிரமுகர் வினோபா, தி.மு.க. உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று வரையில் ரூ.182 கோடி பணம் பிடிபட்டுள்ளது. 991 கிலோ தங்கமும், 611 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.284.67 கோடி ஆகும்.  #LokSabhaElections2019 #ITRaids

    அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுவது உறுதி என அரக்கோணத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார். #LokSabhaElections2019 #Ramadoss
    அரக்கோணம்:

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி கட்சியின் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து மாம்பழம் சின்னத்தில் வாக்குகள் சேரிக்கும் பிரசார பொதுக்கூட்டம் அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் வேலூர் மாவட்டம் 13 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மிகப்பெரிய மாவட்டமாக இருந்து வருகிறது.

    பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நான் வலியுறுத்துவேன். மேலும் அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுவது உறுதி.



    பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பா.ம.க. நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி பெண்களுக்குத்தான் உள்ளது. பெண்களுக்கு ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து சமூகத்தினருடன் பாசத்துடனும், தோழமை உணர்வுடனும் இருந்து வருகிறது.

    தமிழகத்தில் தி.மு.க. கட்சி கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனராக மு.க.ஸ்டாலினும், நிர்வாக இயக்குனர்களாக அவரது மகன், மருமகன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். மேலும் ஆலோசகர்களாக அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இருந்து வருகின்றனர். அவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொண்டால் தி.மு.க. கட்சி முடிவுக்கு வந்து விடுவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.வேலு மற்றும் அ.தி.மு.க கூட்டணி கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்துதரப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  #LokSabhaElections2019 #Ramadoss


    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LSpolls #Jagathrakshakan
    ஆற்காடு:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.

    பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் 
    பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.



    இந்நிலையில், நேற்று ஆற்காடு மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தாழனூர், கத்தியவாடி, கவரப்பாளையம், ராமாபுரம், ஆயிலம்புதூர், ஆயிலம், கீழ்குப்பம், அருங்குன்றம், சாம்பசிவபுரம், கூரம்பாடி, உப்புப்பேட்டை ஆகிய கிராமங்களில் திற்ந்த வேனில் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.



    அப்போது கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நிசாத் அகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். #LSpolls #Jagathrakshakan 
    அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் பெங்களூரு, கோவை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
    தக்கோலம்:

    அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் யார்டு அருகே உள்ள தண்டவாளத்தை இரவு 10.15 மணிக்கு ரெயில்வே ஊழியர்கள் சோதனை செய்தபடி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்ட ஊழியர்கள் உடனடியாக அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ஊழியர்கள் தண்டவாள விரிசல் பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    மேலும் அவ்வழியாக வந்த கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், பெங்களூரு மெயில், எர்ணாகுளம் வராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு 12.45 மணியளவில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டு ரெயில்கள் அந்த பகுதியில் மெதுவாக இயக்கப்பட்டது.

    ரெயில்கள் 2 மணி நேரம் நிறுத்தபட்டதால் பயணிகள் குறித்த நேரத்திற்கு சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    அரக்கோணம் அருகே வாலிபர் வி‌ஷம் குடித்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கோலம்:

    அரக்கோணம் அருகே உள்ள வேடல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பழனி இவரது மகன் சத்யா (வயது20). இவர் நேற்று வி‌ஷம் குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்தார்.

    இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து சத்யாவை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா இறந்தார். இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சத்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே பைக் விபத்தில் மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    பாணாவரம் அடுத்த தப்பூர் கிராமத்தை சேர்ந்த அரிராமன் மகன் லோகேஷ் (18) தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் தனது நண்பரை பார்த்துவிட்டு பைக்கில் அரக்கோணம் அடுத்த மின்னல் ‌‌‌கிராமம் சாலையில் வரும்போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

    அந்த வழியாக வந்த சிலர் அவரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். #Vellore #MinisterVeeramani
    வேலூர்:

    வேலூர் மண்டலத்திற்கு ரூ.6 கோடி மதிப்பில் ஒதுக்கப்பட்ட 24 பஸ்களில் 16 பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.

    இதில் மேலும், 8 புதிய பஸ்கள் இயக்க நிகழ்ச்சி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு கொடியசைத்து புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.

    இதில் சென்னையிலிருந்து வேலூர் வழியாக ஓசூருக்கு 3 பஸ்களும், வேலூரிலிருந்து திருச்சிக்கு ஒரு பஸ்சும், வேலூரிலிருந்து ஈரோட்டுக்கு ஒரு பஸ்சும், ஆம்பூரிலிருந்து அம்பத்தூருக்கு ஒரு பஸ்சும், பேரணாம்பட்டிலிருந்து ஆவடிக்கு ஒரு பஸ்சும், குடியாத்தத்திலிருந்து சோழிங்கநல்லூருக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்:- ‘‘வேலூரை 2 மாவட்டமாக பிரிக்க ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேலூர் மாவட்டத்தை வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என 3 மாவட்டமாக பிரித்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை முதல்- அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன். நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்து உள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். #Vellore #MinisterVeeramani
    அரக்கோணம் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த புலியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜா இவரது மகன் கார்த்திக்ராஜ் (வயது 18). இவர் திருவள்ளுரில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார்.

    நேற்று மாலை கார்த்திக்ராஜ் வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறி உள்ளார்.

    அப்போது கால் தகவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு கார்த்திக்ராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூரில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை அந்த பகுதியில் ஆய்வு செய்தார்.

    அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சிறு கவர்களில் சாராயத்தை நிரப்பி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    போலீசாரை கண்டதும் அங்கு விற்பனை செய்தவர் மற்றும் வாங்க வந்தவர்கள் என அனைவரும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டி சென்று சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சிவாஜி (55) என்பவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து 105 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    ×