ஆலங்குளம் அருகே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை: சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் பலி
நெல்லை:
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை கடங்கனேரி இசக்கி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அகில பிரகாஷ் (வயது 31), ஜேசிபி டிரைவர். இவரது மனைவி உமா(28). இவர்களுக்கு எபி லீலா(3), கீர்த்தி(1) ஆகிய குழந்தைகள் உள்ளனர். நேற்று இவர்களது வீட்டுக்கதவு திறக்கப்படாமல் இருந்தது.
நீண்ட நேரமாக குழந்தைகள் அழுகை சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு திரண்டு சென்று பார்த்தனர். ஜன்னல் வழியாக பார்த்தபோது அகில பிரகாசும், உமாவும் வாயில் நுரை தள்ளியவாறு கிடந்தனர். அருகில் 2 குழந்தைகளும் அழுதவாறு இருந்தனர். இதுகுறித்து ஊத்துமலை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று, கதவை உடைத்து அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு அகில பிரகாசும், உமாவும் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தனர். குழந்தைகள் சிறிதளவு விஷம் குடித்திருந்ததால் உயிருடன் இருந்தனர். குழந்தைகளை மீட்டு ஆலங்குளத்திலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தைகள் இருவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு வயது குழந்தையான கீர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். எபிலீலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்த தம்பதியின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அகில பிரகாஷ் குடும்பத்தினருடன் விஷம் குடித்தது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.
அகில பிரகாஷ்- உமா தம்பதியினர் காதல் திருமணம் செய்துள்ளனர். உமா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளதால் 3-வதும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என நினைத்து வந்துள்ளனர். இதுதொடர்பாக அவ்வப்போது உமா தனது கணவரிடம் இதுகுறித்து கூறிவந்துள்ளார்.
இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் 3-வதும் நமக்கு பெண் குழந்தை பிறந்துவிடும் என எண்ணி விஷம் குடித்துவிட்டு குழந்தைகளுக்கும் விஷத்தை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இதுசம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.