search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child killed"

    பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை வாய்க்காலில் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியை அடுத்த பூதவராயன்பேட்டை பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு இன்று காலை பக்தர்கள் சென்றனர். அப்போது கோவிலின் பின்புறம் உள்ள சின்ன வாய்க்காலில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடிகூட அறுக்கப்படாத நிலையில் பிணமாக மிதந்தது.

    இதை பார்த்து பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வாய்க்காலில் பிணமாக மிதந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை வாய்க்காலில் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்தும், மேலும் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் தற்போது பிறந்த குழந்தைகளின் தகவல்களை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    காசிமேட்டில் பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்துவிட்டு, பாலூட்டியபோது மூச்சுத்திணறி குழந்தை இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். #MotherArrested
    திருவொற்றியூர்:

    சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரைச் சேர்ந்தவர் சத்யராஜ். கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி செலஸ்டின் (வயது 23). இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே 1½ வயதில் நிஷாந்தி என்ற பெண் குழந்தை உள்ளது.

    இதற்கிடையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த செலஸ்டினுக்கு, கடந்த மாதம் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. கடந்த 12-ந் தேதி அந்த குழந்தை திடீரென இறந்தது.

    பாலூட்டியபோது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக செலஸ்டின் கூறினார். இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், பச்சிளம் குழந்தையின் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, இறந்துள்ளது தெரிந்தது. இதையடுத்து ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் குழந்தையின் தாய் செலஸ்டினிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர், தனது குழந்தையை தரையில் அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் அவர் அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு:-

    எனது கணவர் சத்யராஜூடன் வேளச்சேரியில் கட்டிட வேலைக்கு சென்றிருந்தபோது அவருக்கு ஏற்கனவே ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று, அவளுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது.

    ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டு அதனை மறைத்து என்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டது எனக்கு வாழ்க்கையில் வெறுப்பை ஏற்படுத்தியது. 1½ வயதில் பெண் குழந்தையை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நான், இந்த குழந்தையையும் வளர்க்க முடியாமல் கஷ்டப்படுவதைவிட அந்த குழந்தையை கொன்று விடலாம் என்று முடிவு செய்தேன்.

    இதனால் மனதை கல்லாக்கிக்கொண்டு குழந்தையின் காலை பிடித்து, மண்டையை தரையில் ஓங்கி அடித்தேன். இதில் குழந்தை அலறி துடித்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. உடனே குழந்தையை தூக்கி தொட்டிலில் போட்டுவிட்டு குழந்தை பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக நாடகமாடினேன்.

    ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் பின்னந்தலையில் காயம் ஏற்பட்டு குழந்தை இறந்ததாக வந்ததை அடுத்து போலீசார் என்னிடம் விசாரித்தபோது குழந்தையை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்ற குழந்தையை அடித்து கொலை செய்த கல்நெஞ்சக்கார தாய் செலஸ்டினை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். #MotherArrested
    கடலூர் மாவட்டத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து, 2½ வயது குழந்தையை கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #ParentsSuicide #ChildMurder
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள இடைசெருவாய் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 31). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா (25). இவர்களுக்கு பிரதிஷா (2½) என்ற பெண் குழந்தை இருந்தது. பிரகாஷ் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார்.

    பிரகாசுக்கும் அவரது மனைவி உஷாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ராஜ்கோட்டில் இருந்து சொந்த கிராமமான இடைசெருவாய்க்கு வந்தார். நேற்று மாலை கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து இரவில் பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் உஷா திடீரென கண்விழித்தார். அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்படுகிறதே என நினைத்து அழுதார். பின்னர் உஷா வீட்டில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.

    திடீரென்று எழுந்த பிரகாஷ், இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தன்னையும், குழந்தையையும் தனியாக விட்டுவிட்டு உஷா தற்கொலை செய்து கொண்டாரே என எண்ணி கதறி அழுதார். பின்னர் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி முதலில் தூங்கிக்கொண்டிருந்த மகள் பிரதிஷாவின் கையில் கத்தியால் அறுத்தார். ரத்தம் பீறிட்டு கொட்டியது. சிறிது நேரத்தில் குழந்தை பிரதிஷா பரிதாபமாக இறந்தது. பின்னர் தனது கையையும் பிரகாஷ் கத்தியால் அறுத்தார். அவரது கையில் இருந்து ரத்தம் ஆறாக ஓடியது. சிறிது நேரத்தில் பிரகாசும் இறந்தார்.

    இன்று காலை வெகு நேரமாகியும் பிரகாசின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு உஷா தூக்கில் தொங்கியவாறும், பிரகாஷ், குழந்தை பிரதிஷா ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து திட்டக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து பிரகாஷ், உஷா மற்றும் குழந்தை பிரதிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் எதற்காக குழந்தையை கொன்று பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர் என்று போலீசாருக்கு முழுமையாக தகவல் கிடைக்கவில்லை.

    தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #ParentsSuicide #ChildMurder

    மதுரையில் குடும்பத்தகராறு காரணமாக 3 வயது குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம், ஜீவாநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி முத்துமாரி (வயது 29). இவர்களுக்கு விசாகா என்ற 3 வயது மகள் இருந்தாள்.

    செந்தில்குமார் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை இருந்துள்ளது.

    இன்று காலை முத்து மாரியின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அவரது தாயார் போலீசில் புகார் செய்தார்.

    ஜெய்ஹிந்துபுரம் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தனர். அங்கு குழந்தை விசாகா, கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தாள்.

    அவளது அருகில் தாய் முத்துமாரியும் கழுத்து அறுக்கப்பட்டு மயங்கிக் கிடந்தார். மேலும் அவர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    அவரை போலீசார் மீட்டு ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்து மாரி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    ×