செய்திகள்

பதவிகளை தக்கவைக்கவே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு: அ.தி.மு.க. மீது முத்தரசன் தாக்கு

Published On 2017-06-26 08:21 GMT   |   Update On 2017-06-26 08:21 GMT
பதவிகளை தக்கவைத்துக் கொள்ளவே அ.தி.மு.க. ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதாவு ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மதுரை:

மதுரை ஆலங்குளத்தில் நடந்த விழாவிற்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 2000 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை கண்டு பிடித்ததை மத்திய அரசு மறைக்க நினைக்கிறது.

ஆகவே தமிழக அரசு விரைந்து செயல்பட்டு கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அ.தி.மு.க. பல குழுக்களாக பிரிந்து உள்ளது. அவர்களது பலவீனத்தை பயன்படுத்தி பா.ஜ.க. ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

ஆனால் அ.தி.மு.கவினரும் தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வரும் நேரத்திலும் தமிழகத்தின் உரிமைகளை கேட்டு பெறாமல் பதவிகளை தக்கவைத்துக் கொள்ளவே அ.தி.மு.க. பா.ஜ.கவை ஆதரிக்கிறது.

காவிரி நீர் பிரச்சினை, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதை கண்டித்து வருகிற 29 முதல் ஜூலை 5-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற உள்ளது. 6 குழுக்களாக பிரசாரம் செய்து 1000 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. ஜூலை 5-ல் நிறைவு பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News