செய்திகள்

பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2017-06-23 12:20 GMT   |   Update On 2017-06-23 12:20 GMT
பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

தஞ்சாவூர்:

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பாண்டுக்குடி லெனின் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருடைய மகள் பேபிஷாலினி (வயது 28). இவர் நர்சிங் படித்துள்ளார். இதே ஊரில் உள்ள கியாஸ் ஏஜென்சியில் தஞ்சை மாவட்டம் சோழபுரம் மேற்கு கிராமம் வடக்கு அம்பலக்காரத் தெருவை சேர்ந்த கருணாநிதி மகன் ரமேஷ் வேலை பார்த்து வந்தார்.

அப்போது ரமேசுக்கும் பேபிஷாலினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் 2 ஆண்டுகள் காதலித்து வந்தனர். இந்த வி‌ஷயம் இவர்களுடைய வீட்டிற்கு தெரியவர இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் பேபிஷாலினிக்கு அவர்களது வீட்டில் வேறு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்ததால் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் தஞ்சை செங்கலாச்சியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சேவப்ப நாயக்கன்வாரி பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீஸ் சூப்பிரண்டு மகேஷிடம் பேபிஷாலினி மனு அளித்தார். அதில் நாங்கள் திருமணம் முடித்தது எங்களது வீட்டிற்கு பிடிக்கவில்லை. பல இடங்களில் எங்களை தேடி வருகின்றனர். இதனால் நாங்கள் சேவப்ப நாயக்கன்வாரி பகுதியில் இருந்தோம்.

ஆனால் தற்போது அந்த இடம் அவர்களுக்கு தெரிந்து விட்டது. செல்போன் மூலமாகவும் மிரட்டி வருகின்றனர். இதனால் நாங்கள் சேர்ந்து வாழ வழிவகை செய்வதுடன், எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் இதுகுறித்து விசாரணை நடத்தும் படி இன்ஸ்பெக்டர் சந்திராவுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

Tags:    

Similar News