இந்தியா

சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து- தேவஸ்தான தலைவர் தகவல்

Published On 2024-05-05 03:20 GMT   |   Update On 2024-05-05 03:20 GMT
  • ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • பம்பை முதல் சன்னிதானம் வரை ரோப் கார் அமைப்பது குறித்தான ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தலைவர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான செயலாளர், செயல் அதிகாரி, உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறியதாவது:-

சபரிமலையில் கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு, இனிவரும் சீசன் காலங்களில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படும்.

அதாவது ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே முன்பதிவை உறுதி செய்து கொள்ள முடியும்.

பம்பை முதல் சன்னிதானம் வரை ரோப் கார் அமைப்பது குறித்தான ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கை வருகிற 23-ந்தேதி ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். கோர்ட்டின் அனுமதி கிடைத்ததும் ரோப் கார் பணிகள் தொடங்கப்படும். முதற்கட்டமாக அப்பம், அரவணைக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவும், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சேவைக்காகவும் ரோப் கார் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News