தமிழ்நாட்டை ரஜினி ஆளவேண்டும் என நினைக்ககூடாது: சீமான் பேட்டி
நெல்லை:
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையை அடுத்த மூன்றடைப்பு அருகே நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். கூட்ட முடிவில் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. அவர் எளிமையானவர். என்னை அவர் போராளி என கூறியதன் மூலம் எனக்கு இன்னும் பொறுப்புகள் உள்ளன என்பதை உணர்கிறேன். அதனால் எனது அரசியல் பயணத்தில் அதிக கவனம் எடுத்து செல்கிறேன். 40 ஆண்டுகள் ரஜினி இங்கே வாழ்ந்ததால் தன்னை தமிழராக நினைக்கிறார். அவரை நாங்கள் மதிக்கிறோம். அவர் படத்தை முதல் காட்சிக்கு சென்று பார்க்கிறோம்.
அவர் மக்கள் தலைவராக வேண்டும். தமிழகத்திற்கு தலைமை ஏற்று சேவை செய்யவேண்டும். ஆனால் அவர் தமிழகத்தை ஆளவேண்டும் என்று நினைக்கக்கூடாது. அரசியலில் அளப்பரிய தியாகம் செய்யவேண்டும். எங்களை ஆளவேண்டும் என அவர் நினைப்பது சரியாக இருக்காது. இதை அவர்மீது அன்பு வைத்தவன் என்ற முறையில் சொல்லிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.