செய்திகள்

ராஜபாளையத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

Published On 2017-04-30 12:48 GMT   |   Update On 2017-04-30 12:48 GMT
குழந்தை பிறந்த 5 மாதத்தில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார். வரதட்சணை கொடுமையால் அவர் இநத முடிவை எடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ராஜபாளையம்:

ராஜபாளையம் வாகை குளம் பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் உமையாள் பார்வதி (வயது 26). இவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சா புரத்தை சேர்ந்த இருளப்பசாமி (28) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்னரும் உமையாள் பார்வதி தாய் வீட்டில் இருந்து வந்தார். கணவரிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். அப்போது அவர் கூடுதல் வரதட்சணை கேட்பதாக தனது பெற்றோரிடம் உமையாள் பார்வதி தெரிவித்தார்.

இந்த நிலையில் அவரை கணவர் வீட்டிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. நேற்று மாமியார் தனலட்சுமி, கணவரின் சகோதரி சந்தனமாரி ஆகியோர் வந்து உமையாள் பார்வதியை சந்தித்து பேசினர்.

அதன்பிறகு சோகத்தில் இருந்த அவர் வீட்டில் இருந்த குருணை மருந்தை (வி‌ஷம்) தின்று மயங்கினார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உமையாள் பார்வதி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது தந்தை முத்துசாமி, கீழராஜ குலராமன் போலீசில் புகார் செய்தார். அதில் இருளப்பசாமி, அவரது தந்தை மற்றும் சகோதரி கூடுதல் வரட்சணை கேட்டதால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டு உள்ளார்.

இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News