இந்தியா

தர்மேந்திர பிரதான்

பா.ஜனதா கட்சிக்கு தர்மேந்திர பிரதான் தலைவர் ஆகிறார்: மோடி-அமித்ஷா ஆலோசனை

Published On 2022-08-30 04:33 GMT   |   Update On 2022-08-30 04:33 GMT
  • பாரதிய ஜனதா கட்சி விதிப்படி ஒரு நபர் இரண்டு முறைதான் தலைவர் பதவியில் அமர முடியும்.
  • உபேந்திர யாதவ் பெயரும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் பதவிக்கு அடிபடுகிறது.

புதுடெல்லி:

பாரதிய ஜனதா கட்சிக்கு தற்போது ஜே.பி.நட்டா தலைவராக இருக்கிறார். பாரதிய ஜனதாவில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது மரபாக உள்ளது.

ஜே.பி.நட்டாவின் பதவி காலம் ஜனவரி மாதம் நிறைவு பெற உள்ளது. இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனையில் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சி விதிப்படி ஒரு நபர் இரண்டு முறைதான் தலைவர் பதவியில் அமர முடியும். எனவே ஜே.பி.நட்டாவுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு தலைவர் பதவி நீடிப்பு வழங்கப்படலாம் என்றுகூறப்படுகிறது.

அதில் ஒருமித்த கருத்து ஏற்படாத பட்சத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தல்களை மனதில் கொண்டு அவர் ஓராண்டு பதவி நீடிப்பு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஓராண்டுக்கு பிறகு புதிய தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஜே.பி.நட்டாவுக்கு பதில் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திரபிரதானை தலைவர் ஆக்கலாம் என்று பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் கருத்து தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே உபேந்திர யாதவ் பெயரும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. இவர் சமீபத்தில்தான் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் குழுவில் இணைக்கப்பட்டார். இவரை தேர்வு செய்யவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இன்னும் ஓரிரு மாதங்களில் பாரதிய ஜனதாவின் தலைவர் யார்? என்பது தெரிந்து விடும்.

Tags:    

Similar News