குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 - புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் சித்தராமையா
- கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
- அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதல் மந்திரி சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
பெங்களூரு:
கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் அறிக்கை முக்கிய காரணமாக இருந்தது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்பதும் காங்கிரசின் வாக்குறுதி.
இந்நிலையில், கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்திற்கான விண்ணப்ப பதிவை முதல் மந்திரி சித்தராமையா இன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் 1.28 கோடி குடும்பங்கள் பயனடையும். விரைவில் வீடு வீடாக விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.