செய்திகள்
தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை

சத்தீஸ்கரில் சோகம் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 கொரோனா நோயாளிகள் பலி

Published On 2021-04-18 01:14 GMT   |   Update On 2021-04-18 01:16 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் திகரப்பரா பகுதியில் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அதிலும், கொரோனாவால் அதிக பாதிப்பிற்கு உள்ளான சிலர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று மாலை திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதனால், பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு முழுவதும் பரவியது. இதனால், ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் பலர் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்த மீட்புக்குழுவினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், தீ விபத்தில் சிக்கிக்கொண்ட நோயாளிகளையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

அதில், 29 கொரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த தீவிபத்தில் சிக்கி ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேரில் 4 பேர் தீ விபத்தால் ஏற்பட்ட புகையில் மூச்சுத்திணறியும், ஒருவர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
Tags:    

Similar News