செய்திகள்
மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன்

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் - சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தகவல்

Published On 2021-02-15 20:08 GMT   |   Update On 2021-02-15 20:08 GMT
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகள் அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் தொடங்கும் என மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 7 நாட்களில் 188 மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் இல்லை. அதேநேரம் 21 மாவட்டங்களில் கடந்த 21 நாட்களில் புதிய பாதிப்புகள் இல்லை.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை மற்றும் செயல் திறன் மிக்கவை ஆகும். இதுதொடர்பான வதந்திகளுக்கு மக்கள் இடம் கொடுக்கக்கூடாது.

நாட்டில் மேலும் 18-19 தடுப்பூசிகள் தயாராகி வருகின்றன. அவை தற்போது பல்வேறு கட்ட ஆய்வில் இருக்கின்றன. இந்தியா சுமார் 25 நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தகுந்த முறையில் பின்பற்ற வேண்டியது முக்கியமாகும். இதையே உண்மையான தடுப்பூசிகளுடன் சமூக தடுப்பூசியும் முக்கியம் என நான் கூறி வருகிறேன்.

இவ்வாறு ஹர்சவர்தன் தெரிவித்தார்.
Tags:    

Similar News