search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா தடுப்பூசி"

    • பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர்.
    • நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    இந்தியா உட்பட40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இந்த சூழலில் புதிய கொரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய கொரோனா மரபியல் கூட்ட மைப்பின் (இன்சா காக்) தலைவர் என்.கே.அரோரா கூறியதாவது:-

    இந்தியாவில் சுமார் 88 சதவீத மக்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட, இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பரவும் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. இந்த வகை கொரோனா வைரசால், காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன. பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர். மருத்துவ மனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது.


    அதேநேரம், நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். எந்த வகையான கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதை கண்டறிய சளி மாதிரிகளை மரபணு ஆய்வுக்கு அனுப்பவேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளோம். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்தால் போதும். அச்சம்அடைய தேவையில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் பூனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. தற்போது குளிர்காலம், பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக ஜே.என்.1 வைரஸ் வேகமாக பரவுகிறது. இதன் வீரியம் குறைவாகவே உள்ளது. எனினும் வைரஸ் பரவலை தடுக்க அந்தந்த நாடுகளின் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவைசேர்ந்த முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் வெளியிட்ட அறிக்கையில், 'குளிர்காலம் தொடங்கி உள்ளதால் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் பரவல் சற்று அதிகரித்து உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. எனினும், மூத்த குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். எக்ஸ் பி.பி.1 வகை வைரசுக்காக தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை ஜே.என்.1 வகை வைரஸ் பரவலை தடுப்பதற்கும் பயன்படுத்தலாம்' என்று தெரிவித்து உள்ளது.

    • மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது மறுத்து வந்தாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை.
    • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டும் வந்தது.

    புதுடெல்லி:

    கொரோனா தொற்றுக்கு பிறகு இளம் வயதில் மாரடைப்பில் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு கொரோனா தடுப்பூசியே காரணம் என்று பரவலாக மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

    இதை மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது மறுத்து வந்தாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை. இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டும் வந்தது.

    இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளால் இளைஞர்களிடையே திடீர் மரணம் ஏற்படவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

    மேலும் ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில், மரபு தொடர்பான நோய்கள், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால்தான் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

    • இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
    • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கொரோனா தொற்றுக்கு பிறகு இளம் வயதில் மாரடைப்பில் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு கொரோனா தடுப்பூசியே காரணம் என்று பரவலாக மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. இதை மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது மறுத்து வந்தாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை.

    இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களின் திடீர் மரணத்துக்கான காரணிகள் என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வில் இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது குடும்ப சூழல்கள், வேலை தொடர்பான மன அழுத்தம், உணவு பழக்க வழக்கம், போதிய உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, புகை பிடிப்பது, போதை வஸ்து பழக்க வழக்கங்கள் போன்ற பல காரணங்கள் உள்ளன.

    நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென்று மாரடைப்பால் இறந்த 45 வயதுக்கு உட்பட்ட 729 பேரின் மரணம் தொடர்பாக ஆய்வு செய்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் 1.10.21 முதல் 31.3.2023-க்குள் மரணம் அடைந்தவர்கள்.

    மருத்துவ குழுவினர் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டது மற்றும் மருத்துவ ரீதியாக நடத்திய ஆய்வில் கொரோனா தடுப்பூசி அவர்களின் மரணத்துக்கு காரணமல்ல என்பதும் பல்வேறு மருத்துவ காரணங்கள், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் தான் மரணத்துக்கு காரணமாக அமைந்திருந்தது என்றும் தெரிய வந்தது.

    எனவே இவற்றை எப்படி சரி செய்வது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். மிதமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதேபோல் கெட்ட கொழுப்பு பரிசோதனையை அடிக்கடி செய்து கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

    • கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து சுமார் 30 மருத்துவ மனைகளில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
    • இதயம் சார்ந்த நோய்களுக்கான பொதுப் பெயர் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

    புதுடெல்லி:

    கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

    கொரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது தொடர்பான 3 வெவ்வேறு ஆய்வுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுவது தொடர்பாக சுமார் 40 மருத்துவமனைகளில் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    அதேவேளையில், கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மாரடைப்புக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து சுமார் 30 மருத்துவ மனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதயம் சார்ந்த நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக தேசிய தொற்றாநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த நிதியைக் கொண்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

    இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ம்ஸ் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்கீழ் 60 கோடிக்கும் அதிகமானோர் பலனடைந்துள்ளனர்.

    இதயம் சார்ந்த நோய்களுக்கான பொதுப் பெயர் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உள்ளூர் அளவில் கொரோனா தொற்று பரவலை நிர்வகிப்பதற்கு வட்ட அளவில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பு இருப்பது அவசியம்.
    • பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நோய்த்தொற்று அதிகரிப்பு காணப்படுவது குறித்தும் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

    புதுடெல்லி:

    கொரோனா தொற்று தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து சுகாதார மதிப்பாய்வு செய்ய பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறையினர் பங்கேற்று மதிப்பீடுகளை மேற்கொண்டனர். நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பு, தளவாடங்கள், மருந்துகள் போன்றவை தயார் நிலையில் வைப்பது மற்றும் தடுப்பூசி பிரசாரத்தில் கவனம் செலுத்துவது ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

    நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், சர்வதேச அளவிலும் கொரோனா நிலைமையைப் பற்றிய விரிவான விளக்கத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நலச் செயலர் ராஜேஷ் பூஷண் வழங்கினார்.

    நாட்டில் பதிவான கொரோனா தொற்றுகளில் பெரும்பான்மையாக தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் பதிவாகி உள்ள புள்ளிவிவரத் தகவல்களை அவர் எடுத்துரைத்தார்.

    மேலும், பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நோய்த்தொற்று அதிகரிப்பு காணப்படுவது குறித்தும் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

    பின்னர் பிரதமரின் முதன்மை ஆலோசகர் பி.கே.மிஸ்ரா கூறுகையில், உள்ளூர் அளவில் கொரோனா தொற்று பரவலை நிர்வகிப்பதற்கு வட்ட அளவில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பு இருப்பது அவசியம். மாநிலங்களுடன் கலந்தாலோசித்து அதை உறுதிப்படுத்தலாம் என்று தெரிவித்தார்.

    மேலும், இன்புளூயன்சா வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்ட பரிசோதனை மாதிரிகளை முழு மரபணு வரிசை முறைக்கான ஆய்வுகளுக்கு அனுப்புவதில் கவனம் செலுத்தவும் கேட்டுக்கொண்டார்.

    மத்திய சுகாதார அமைச்சகத்தின் எந்த முன் அனுமதியும் இல்லாமல் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக தேவையான கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    • தமிழகத்துக்கு மத்திய அரசுத் தரப்பில் இருந்து இதுவரை 11.93 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
    • 38 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 5.51 கோடி பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    மத்திய சுகாதாரத் துறை கூடுதல் ஆணையா் டாக்டா் வீணா தவணுக்கு, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் 2021, ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 38 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 5.51 கோடி பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன. 18 வயதைக் கடந்த 97.89 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 92.47 சதவீதம் பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை தவணையை (பூஸ்டா்) பொருத்தவரை 17.04 சதவீதம் போ் செலுத்திக் கொண்டுள்ளனா்.

    தமிழகத்துக்கு மத்திய அரசுத் தரப்பில் இருந்து இதுவரை 11.93 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. கோவிஷீல்ட் தடுப்பூசி 9.29 கோடி, கோவேக்சின் 2.18 கோடி, கோா்பிவேக்ஸ் தடுப்பூசி 45.20 லட்சம் தவணைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

    தமிழகத்தில் தற்போது எந்த வகை கொரோனா தடுப்பூசியும் கையிருப்பில் இல்லை. அதேவேளையில், தமிழகத்தில் இன்னமும் 21 லட்சத்துக்கும் மேற்பட்டோா் முதல் தவணையும், 86 லட்சத்துக்கும் அதிகமானோா் இரண்டாம் தவணையும், 4.42 கோடி போ் முன்னெச்சரிக்கை தவணையும் செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா்.

    அதைக் கருத்தில் கொண்டு, காலாவதி காலம் அதிகம் உள்ள 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளையும், 50 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகளையும், 75,000 கோா்பிவேக்ஸ் தடுப்பூசிகளையும் விரைந்து வழங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    • செர்பிய வீரர் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
    • இதனால் அமெரிக்க டென்னிஸ் போட்டிகளில் ஜோகோவிச் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    நியூயார்க்:

    சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் துபாய் ஓபன் டென்னிசில் அரையிறுதியில் தோற்ற போதிலும் ஜோகோவிச் 'நம்பர் ஒன்' இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அவர் முதலிடத்தில் இருப்பது இது 379-வது வாரமாகும். அதிக வாரங்கள் முதலிடத்தை அலங்கரித்து சாதனை படைத்துள்ளார் ஜோகோவிச்.

    இந்நிலையில், இண்டியன்வெல்ஸ் ஓபன் மற்றும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் முறையே வருகிற 8-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையும், 22-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரையும் நடக்கிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி கிடைக்காததால் 'நம்பர் ஒன்' வீரரும், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகி இருக்கிறார்.

    கொரோனா தடுப்பூசி போடாத வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி கிடையாது என்ற உத்தரவு அமலில் இருக்கிறது. இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஜோகோவிச் தனக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளுக்கு அமெரிக்க அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து அவர் இந்தப் போட்டியில் இருந்து பின்வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார்.

    கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலந்து கொள்ள மெல்போர்ன் சென்ற ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போடாததால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

    இதேபோல் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் போட்டியையும் அவர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொரோனா தொற்று மேலாண்மையில் இது வலுவான பதிலளிப்பாக அமைந்தது.
    • கொரோனாவை கட்டுப்படுத்தி, பொருளாதார செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்டன.

    புதுடெல்லி :

    சீனாவில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா தொற்று, உலக நாடுகள் எல்லாவற்றிலும் பரவியது. இந்த தொற்றின் ஆரம்ப காலத்திலேயே இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டன.

    இந்தத் தடுப்பூசியால் நாட்டில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது, உயிரிழப்புகளும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன.

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளால் 34 லட்சம் பேரது உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வுத்தகவல் தெரிவிக்கிறது.

    'பொருளாதாரத்தை சீர்ப்படுத்துதல்: இந்தியாவின் தடுப்பூசி மற்றும் தொடர்புடைய சிக்கல்களில் பொருளாதாரத்தின் தாக்கத்தை மதிப்பிடுதல்' என்ற தலைப்பில் வெளியாகி உள்ள இந்த ஆய்வு கட்டுரையை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா உலகளாவிய சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவத்தினால் 2020-ம் ஆண்டு, ஜனவரி மாதம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தொற்று மேலாண்மை தொடர்பான செயல்முறைகள், கட்டமைப்புகள் இந்தியாவில் செயல்படத்தொடங்கி விட்டன.

    பிரதமர் மோடியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அரசு, ஒட்டுமொத்த மக்கள்சமூகம் என்ற அணுகுமுறை ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது. கொரோனா தொற்று மேலாண்மையில் இது வலுவான பதிலளிப்பாக அமைந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:-

    * கொரோனா தொற்றைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், தினசரி பாதிப்பின் அளவு 7,500 என்ற அளவில் (2020 ஏப்ரல் 11 நிலவரம்) இருந்தது.

    * மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஊரடங்கு போட்டிருக்காவிட்டால், கொரோனா தினசரி பாதிப்பின் அளவு அப்போது 2 லட்சம் என்ற அளவுக்கு சென்றிருக்கும்.

    * ஊரடங்கால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,500 என்ற அளவிலேயே இருந்தது.

    * இந்தியாவில் கட்டுப்படுத்துதல், நிவாரணங்கள், தடுப்பூசி நிர்வாகம் ஆகிய 3 அம்சங்களால் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. கொரோனாவை கட்டுப்படுத்தி, பொருளாதார செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்டன. மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டது. தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி வலுப்படுத்தப்பட்டது.

    * இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் தடுப்பூசி திட்டம், செயல்படுத்தப்பட்டதால் 34 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இங்கிலாந்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து 97 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னா், சுமார் 10 சதவீதம் பேருக்கு, அதாவது 8 லட்சம் பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டன.
    • பக்க விளைவுகள் லேசாகவோ, மிதமாகவோ இல்லை. அதிகமாக இருந்தது.

    இந்தியாவை பூர்வீகமாக கொண்டவா் இங்கிலாந்து மருத்துவா் அசீம் மல்ஹோத்ரா. கொரோனாவுக்கு எதிரான எம்ஆா்என்ஏ தடுப்பூசிகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று சா்வதேச அளவில் வலியுறுத்துவோரில் முன்னணியில் உள்ளாா். இந்தியா வந்துள்ள அவா், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    அமெரிக்காவின் பைசர், மாடா்னா போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் எம்.ஆர்.என்.ஏ. கொரோனா தடுப்பூசிகள் உடலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளன. எனவே, அந்த தடுப்பூசிகளின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று சா்வதேச அளவில் குரல்கள் எழுந்துள்ளன.

    கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் வரை, எம்.ஆர்.என்.ஏ. மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடப்பட்டு, அதன் முடிவுகள் ஆய்விதழ் ஒன்றில் வெளியிடப்பட்டது. அந்த முடிவில், இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகள், மாரடைப்பு, பக்கவாதம், இளவயதினருக்கும் முதியவா்களுக்கும் ரத்தம் உறைவது, சில உயிரிழப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்துவதில் பைசர் நிறுவனத்தின் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை விட, கோவிஷீல்ட் தடுப்பூசி மிக மோசமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து 97 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னா், சுமார் 10 சதவீதம் பேருக்கு, அதாவது 8 லட்சம் பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டன. அந்தப் பக்க விளைவுகள் லேசாகவோ, மிதமாகவோ இல்லை. அதிகமாக இருந்தது. இதுபோல முன் எப்போதும் நடந்தது இல்லை.

    கடுமையான பக்க விளைவுகள் காரணமாக சில நாடுகளில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தப்பட்டது. அப்படி இருக்கும்போது, இந்தியாவில் அந்தத் தடுப்பூசி செலுத்தப்படுவது ஏன்? அந்தத் தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையை முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டும்.

    கோவேக்சின் தடுப்பூசியின் தரவுகளை ஆராய்ந்ததில், அந்தத் தடுப்பூசியால் குறிப்பிடும்படி பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது. அந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது போலவே தென்படுகிறது. ஆனால், பிற தடுப்பூசிகள் ஆய்வுக்குட்படுத்தப்படும் நிலையில், கோவேக்ஸினும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.

    90 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியா்கள் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர் கொண்டனா். அவா்களுக்கு உடலில் இயற்கையாக நோய் எதிா்ப்பு சக்தி உருவாகியுள்ளது. இயற்கையாக உருவாகும் நோய் எதிா்ப்பு சக்தி மிகவும் ஆற்றல் வாய்ந்தது.

    அது கடுமையான உடல்நல பாதிப்புகளில் இருந்தும், மரணத்திலிருந்தும் பாதுகாக்கிறது. எனவே, கொரோனா குறித்து இந்திய மக்களும் அரசும் கவலை அடைய வேண்டாம்.

    இனி இந்தியாவில் யாருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதேபோல பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. அதன்மூலம் பக்க விளைவுகள் அதிகரிக்கலாம். மென்மேலும் தடுப்பூசி தவணைகளை செலுத்திக் கொள்ளும்போது கடுமையான பக்க விளைவுகளால் அவதிப்பட அதிக வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசுகளுக்கு ரூ.325, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • விரைவில் தனியார் மருத்துவமனைகளில் மருந்து விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தான இந்த மருந்துக்கு இன்கோவேக் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் ஒப்புதல் வழங்கியதையடுத்து, குடியரசு தினமான இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்த தடுப்பு மருந்தை அறிமுகம் செய்து வைத்தனர்.

    இந்த மருந்து அரசுக்கு ரூ.325 என்ற விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை வாங்குவதற்காக தனியார் மருத்துவமனைகள் முன்கூட்டியே ஆர்டர் செய்திருப்பதால், விரைவில் தனியார் மருத்துவமனைகளில்  இந்த மருந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி தேசிய தடுப்பூசி திட்டத்தின் பயன்பாட்டில் உள்ளது.
    • கோவேக்சின் பூஸ்டர் டோஸ் டெல்டா, ஒமைக்ரான் வைரஸ்களுக்கு எதிரான நோயின் தீவிரத்தை குறைக்கிறது.

    புதுடெல்லி :

    டெல்டா, ஒமைக்ரான் வகை வைரஸ்களுக்கு எதிரான செயல்திறனை கோவேக்சின் பூஸ்டர் டோஸ் அதிகரிக்கிறது என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக முற்றிலும் உள்நாட்டில் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி, அது தேசிய தடுப்பூசி திட்டத்தின் பயன்பாட்டில் உள்ளது.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்), பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான கோவேக்சின் தடுப்பூசி பற்றிய ஒரு ஆராய்ச்சியை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. டெல்டா-ஒமைக்ரானுக்கு எதிராக... இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    கோவேக்சின் தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது டோஸ் செலுத்தியதன் பாதுகாப்பு செயல்திறன் சிரியாவின் வெள்ளெலி மாதிரியைக் கொண்டு (மனிதன் தொடர்பான நோய்களை ஆராய உதவும் விலங்கு மாதிரி) ஆராயப்பட்டது.

    இதில், கோவேக்சின் தடுப்பூசியின் 2-வது டோஸ் மற்றும் 3-வது டோஸ் (பூஸ்டர் டோஸ்) செயல் திறனை ஆராய்ந்ததில், இது டெல்டா வைரசுக்கு எதிரான செயல்திறனை மேம்படுத்துகிறது. ஒமைக்ரான் வகைகளான பிஏ.1.1 மற்றும் பி.ஏ.2 ஆகியவற்றுக்கு எதிராக பாதுகாப்பை அளிக்கிறது என தெரிய வந்துள்ளது. நோய் எதிர்ப்பு பதிலளிப்பு, மருத்துவ பலன் கண்காணிப்புகள், வைரஸ் அளவு குறைதல், நுரையீரல் நோயின் தீவிரம் ஆகியவை ஆராயப்பட்டன.

    டெல்டா வைரஸ் தொற்று ஆராய்ச்சியில், 2-வது மற்றும் 3-வது டோஸ்களுக்கு இடையேயான பாதுகாப்பு பதிலளிப்பை ஒப்பிட்டு பார்த்ததில், பாதுகாப்பில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் செயல்திறன் உணரப்பட்டது. நுரையீரல் நோய் தீவிரம், 3 டோஸ் தடுப்பூசிக்கு பின் மேலும் குறைந்தது. டெல்டா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறனை குறிக்கும் 2-வது மற்றும் 3-வது டோஸ் தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தி ஆராய்ந்ததில், வைரஸ் சுமை குறைந்தது.

    ஒமைக்ரான் வைரஸ்களான பிஏ.1.1 மற்றும் பி.ஏ.2 ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பு பதிலளிப்பை ஆய்வு செய்ததில், 3-வது டோஸ் செலுத்திய பிறகு வைரஸ் சுமை குறைந்தது தெரியவந்தது. தற்போதைய ஆராய்ச்சியின் முடிவு, கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியானது, டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்களுக்கு எதிரான நோயின் தீவிரத்தை குறைக்கிறது. பாதுகாப்பு நோய் எதிர்ப்பு பதிலளிப்பை விரிவுபடுத்துகிறது என தெரிய வந்துள்ளது.

    இவ்வாறு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

    • 30 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • 16 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது, 15 முதல் 18 வயது மற்றும் 18 வயதுக்குட்பட்டோா் என மொத்தம் 21 லட்சத்து 83 ஆயிரத்து 700 போ் உள்ளனா். இதில் தற்போது வரையில் 21 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு முதல் தவணையும், 16 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 2, 681 மையங்களில் 30 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், 18, 831 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ×