செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா அச்சத்தால் புற்றுநோயால் இறந்த தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய மகன்களுக்கு அனுமதி மறுப்பு

Published On 2020-07-27 10:46 GMT   |   Update On 2020-07-27 10:46 GMT
கொரோனா தொற்று இருக்கலாம் என அச்சத்தால் புற்றுநோயால் இறந்த தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய மகன்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
புவனேஸ்வர்:

ஒடிசாவின் தியோகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரேமானந்தா சாஹூ. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் அங்குள்ள ஒரு சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா தியேட்டர் மூடப்பட்டதால், வேலையை இழந்த பிரேமானந்தா சாஹூ, 2 மகன்களையும் சொந்த கிராமத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு சினிமா தியேட்டருக்கு அருகிலேயே துரித உணவு தயார் செய்து விற்பனை செய்து வந்தார்.

அவரும் அவரது மனைவியும் தியேட்டருக்கு அருகிலேயே சிறிய குடில் அமைத்து அதில் தங்கி இருந்தனர்.

இந்த சூழலில் பிரேமானந்தா சாஹூவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

எனினும் சில நாட்களிலேயே அந்த ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து புற்று நோயாளிகள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து வேறு வழியின்றி பிரேமானந்தா சாஹூ மீண்டும் குடிலுக்கு திரும்பினார். அவர் வேலை பார்த்து வந்த தியேட்டர் உரிமையாளர் மற்றும் சில தன்னார்வலர்கள் அவரின் சிகிச்சைக்கு உதவி செய்து வந்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி பிரேமானந்தா சாஹூ உயிரிழந்தார். இந்த விஷயம் தெரிய வந்ததும் அவரது 2 மகன்களும் தியோகர் மாவட்டத்துக்கு விரைந்தனர்.

ஆனால் பிரேமானந்தா சாஹூவுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தால் அவருக்கு இறுதி சடங்கு செய்ய அவரின் மகன்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து சமூக ஆர்வலர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பிரேமானந்தா சாஹூவின் உடலை தகனம் செய்தனர்.
Tags:    

Similar News