செய்திகள்
சிவராஜ் சிங் சவுகான்

ம.பி.யில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக உச்ச நீதிமன்றத்தை நாடிய சவுகான்

Published On 2020-03-16 08:15 GMT   |   Update On 2020-03-16 08:15 GMT
மத்திய பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், இது தொடர்பாக முன்னாள் முதல்வர் சவுகான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா கடந்த 10-ந் தேதி கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்களாக இருந்து வந்த 6 மந்திரிகள் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

சட்டசபையில் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக பாஜக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் வலியுறுத்தினர். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் சட்டசபை 26-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. 



இதனையடுத்து மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான், உச்ச நீதிமன்றத்தை நாடினார். மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியை கருத்தில் கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி கமல்நாத் அரசுக்கு உத்தரவிடவேண்டும் என அவர் தனது மனுவில் கூறியுள்ளார். 

மார்ச் 16 ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வருக்கு  ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக  அட்வகேட் ஜெனரல் புருஷைந்திர கவுரவ் கூறியுள்ளார். 
Tags:    

Similar News