தமிழ்நாடு

மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவி ஆஜராகாததால் தீர்ப்பு ஒத்திவைப்பு

Published On 2024-04-26 07:30 GMT   |   Update On 2024-04-26 07:30 GMT
  • அனைத்து தரப்பிலும் விசாரணை முடிந்து இறுதி வாதங்களை தொடர்ந்து இன்று (26-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
  • உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலாதேவி (வயது 38). இந்தநிலையில் தான் பணியாற்றிய கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் சிலரை மூளைச்சலவை செய்துள்ளார்.

மாணவிகளின் குடும்ப வறுமை மற்றும் ஏழ்மை நிலையை தெரிந்துகொண்டு அவர்களிடம் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு வழிநடத்தியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலாதேவி, அவருக்கு உடந்தையாக இருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அனைத்து தரப்பிலும் விசாரணை முடிந்து இறுதி வாதங்களை தொடர்ந்து இன்று (26-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். ஆனால் 10.15 மணி வரை பேராசிரியை நிர்மலாதேவி வரவில்லை. இதையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இன்று ஆஜராக முடியாத நிலை இருப்பதாக அவரது வக்கீல் சார்பில் மனு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று வழங்கப்படுவதாக இருந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News