தமிழ்நாடு செய்திகள்

செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை... 101 வயதான நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

Published On 2026-02-24 10:43 IST   |   Update On 2026-02-24 10:43:00 IST
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்று நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
  • தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

வீட்டில் தவறி விழுந்ததில் அவர் தலையில் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் பிரச்சனை, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் கருவிப் பொருத்தப்பட்டு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 26-ந்தேதி 101-வது பிறந்த நாளை கொண்டாடிய நல்ல கண்ணுவிற்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 2 மாதமாக மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நல்ல கண்ணுவின் உடல்நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்று நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து விசாரித்தார். கம்யூனிஸ்ட் தலைவர்களும், நிர்வாகிகளும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். செயற்கை சுவாச கருவி உதவியுடன் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

நல்லகண்ணுவின் உடல் நலம் குறித்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்கள் கூறும் போது, வயது மூப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். வெண்டிலேட்டர் உதவியுடன் அவரது உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது என்றனர்.

நல்லகண்ணுவின் உடல் நலம் பற்றிய தகவல் அறிந்தவுடன் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வருகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் முத்தரசன், வீரபாண்டியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.

தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீர பாண்டியன் கூறும்போது, தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நல்ல கண்ணுவின் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். ஆஸ்பத்திரியின் மருத்துவ அறிக்கையை எதிர்நோக்கி இருக்கிறோம் என்றார்.

Tags:    

Similar News