செய்திகள்
கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பிரியங்கா காந்தியுடன் சந்திப்பு
உ.பி.யில் சோன்பத்ரா கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பிரியங்கா காந்தியை விருந்தினர் இல்லத்தில் சந்தித்தனர். அவர்களுக்கு பிரியங்கா ஆறுதல் கூறினார்.
லக்னோ:
உத்தரபிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா எனும் இடத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆதரவு கூற காங்கிரஸ் கட்சியின் உபி மாநில கிழக்குப்பகுதி பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா நேற்று காணச் சென்றார்.
நாராயண்பூர் எனும் பகுதியில் போலீசார் பிரியங்கா காரை தடுத்து நிறுத்திய போலீசார், இங்கு வர அனுமதி இல்லை என கூறியுள்ளனர்.
உடனடியாக பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தொண்டர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். கலவரத்தில் ஈடுபட்டவர்களை சந்திக்காமல் போகப் போவதில்லை என கூறினார் பிரியங்கா காந்தி.
இதையடுத்து, அவரை சுனார் விருந்தினர் விடுதிக்கு அழைத்து சென்றனர் போலீசார். அங்கும் அவர் தர்ணாவில் ஈடுபட்டார். இரவிலும் தர்ணா போராட்டம் நடந்தது. இன்று காலையும் சோன்பத்ரா செல்ல பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், கலவரத்தில் பாதிக்கப்பட்ட இருவரது உறவினர்கள் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியை சந்திக்க விருந்தினர் விடுதிக்கு வந்தனர். அவர்களுக்கு அவர் ஆறுதல் அளித்தார்.