செய்திகள்
பாஜக அமைப்பு தேர்தல் மேற்பார்வை குழு தலைவராக ராதா மோகன் சிங் நியமனம்
பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு தேர்தல் மேற்பார்வை குழு தலைவராக ராதா மோகன் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் காரணமாக பா.ஜனதாவின் அமைப்பு தேர்தல் ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பாராளுமன்ற தேர்தல் முடிந்து விட்டதால், கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்த பா.ஜனதா தயாராகி வருகிறது.
அக்கட்சியின் தற்போதைய தலைவர் அமித்ஷாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அவர் மத்திய மந்திரியாக பதவியேற்று இருப்பதால் வேறு ஒருவரை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாஜக அமைப்பின் தேசிய மற்றும் மாநிலத் தலைவர் உள்பட அனைத்து விதமான பதவிகளுக்கான தேர்தல் நடவடிக்கையை கண்காணிக்கும் மேற்பார்வை குழு தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவர் ராதா மோகன் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இத்தேர்தலில் ராதா மோகன் சிங்குக்கு ஆலோசனை வழங்குவதற்காக அக்கட்சியின் வினோத் சன்கர், ஹன்ஷ்ராஜ் அஹிர் மற்றும் சி.டி.ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.