தமிழ்நாடு

நீரின்றி வறண்டதால் வீராணம் ஏரியில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்

Published On 2024-04-26 03:38 GMT   |   Update On 2024-04-26 03:38 GMT
  • மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கீழணைக்கு வந்து, அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும்.
  • தினமும் காலை மற்றும் மாலையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை காணமுடிகிறது.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரி வீராணம் ஏரி. இந்த ஏரியின் பிரதான கிழக்கு கரையின் நீளம் 16 கிலோ மீட்டர் ஆகும். இந்த ஏரியின் பரப்பளவு 15 சதுர மைல்களாகும். மொத்த நீர்மட்டம் 47.50 அடியாக இருந்தாலும் தரை மட்டம் 31.90 அடியில் இருந்தே நீரை சேமித்து வைக்க முடியும். அதாவது 15.60 அடி மட்டுமே தண்ணீரை தேக்க முடியும். இதன் மூலம் 1.465 டி.எம்.சி. நீரை தேக்கலாம்.

கிழக்கு கரையில் 28 மதகுகள் மூலமாகவும், மேற்கு கரையில் 6 மதகுகள் மூலமாகவும் 49 ஆயிரத்து 440 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கீழணைக்கு வந்து, அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும்.

இங்கிருந்து கடந்த 2004-ம் ஆண்டு முதல் சென்னை பெருநகர குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 78 கன அடி வீதம் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. இதை நல்வாய்ப்பாக பயன்படுத்தி 48 லட்சம் கன மீட்டர் அளவுக்கு தூர்வாரினால் கூடுதலாக 509 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.

எதிர்வரும் மழைக்கு முன்பாக வீராணம் ஏரியை தூர்வாரி, கரையை பலப்படுத்த வேண்டும் எனவும், ஏரியில் படிந்துள்ள வண்டல் மண்ணை அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே சமயம் வீராணம் ஏரி வறண்டு காணப்படுவதால் சிறுவர்கள் அதை விளையாட்டு மைதானமாக மாற்றி விட்டனர்.

அங்கு தினமும் காலை மற்றும் மாலையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை காணமுடிகிறது. இது கடும் வறட்சியால் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரியின் பரிதாப நிலையை காட்டுகிறது.

Tags:    

Similar News