செய்திகள்
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கட்சி தொண்டர்களுடன் பேரணியாக சென்றபோது எடுத்தபடம்.

விவசாயிகளின் நிலுவை தொகையை 15 நாட்களில் வழங்க வேண்டும்- உத்தவ் தாக்கரே கெடு

Published On 2019-07-18 02:11 GMT   |   Update On 2019-07-18 02:11 GMT
விவசாயிகளின் பயிர் காப்பீடு நிலுவை தொகையை 15 நாட்களில் வழங்க வேண்டும் என மும்பையில் நடந்த போராட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.
மும்பை :

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் அளித்த பேட்டியில், “விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பயிர் காப்பீடு தொகையை வழங்காத காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் ஜூலை 17-ந்தேதி சிவசேனா சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என அறிவித்தார்.

மாநில அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா தேர்தல் ஆதாயத்தை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சி போல் போராட்டத்தை அறிவித்து, கேலிக்கூத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது. இந்தநிலையில், அறிவித்தபடி நேற்று சிவசேனா சார்பில் பயிர் காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து போராட்டம் நடந்தது.



உத்தவ் தாக்கரே போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாந்திராவில் உள்ள தனது மாதோஸ்ரீ இல்லத்தில் இருந்து பாந்திரா- குர்லா காம்ப்ளக்ஸ் நோக்கி நடைபயணமாக பேரணி புறப்பட்டார். அவருடன் சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட மாநில மந்திரிகள் மற்றும் சிவசேனாவினர் ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் பாந்திரா- குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஒரு பயிர் காப்பீட்டு நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உத்தவ் தாக்கரே பேசுகையில், சிவசேனாவின் இந்த போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாக, அவர்களது பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நடத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு 15 நாட்களுக்குள் காப்பீடு நிறுவனங்கள் பயிர் காப்பீட்டு நிலுவை தொகையை வழங்க வேண்டும், என்று கெடு விதித்தார்.
Tags:    

Similar News