search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Government"

    • சிவில் சர்வீஸ் தேர்வு கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது
    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது வினாத்தாள்களை எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம்

    ஐ ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத அனுமதியளித்துள்ள நிலையில், கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கின் விசாரணையை ஜூன் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம் என யோசனை தெரிவித்தனர்.

    இந்த மொழி பெயர்ப்பு நூறு சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும், 70 சதவீதம் வரை சரியாக இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அவற்றை மனிதர்களைப் பயன்படுத்தி சரி செய்யலாம் எனவும், இது சம்பந்தமாக நேர்மறையாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • முதலமைச்சர் ஏற்படுத்திய மகளிருக்கு இலவச பஸ் திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் மட்டும் பெண்கள் 25 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.
    • கடந்த தேர்தல்களின்போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை.

    தென்காசி:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு தீவிர பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும். சொன்னதை செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். அதற்கு நீங்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

    இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் விற்பனை செய்யப்படும். தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் முழுமையாக அகற்றப்படும். இதனால் நீங்கள் சுங்கச்சாவடிக்கு கட்ட வேண்டிய கட்டணம் ஒன்றிய அரசுக்கு செலுத்த வேண்டியது இல்லை.

    நெல்லை-சங்கரன்கோவில் ரெயில்வே வழித்தடத்தை இணைத்து ஆலங்குளம், சுரண்டை, சேர்ந்தமங்கலம் பகுதிகளை உள்ளடக்கிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். கோவையில் இருந்து சென்னை செல்லும் ரெயில் கடையம் பகுதியில் நின்று செல்ல வழிவகை செய்யப்படும்.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்களின் அன்பை பெற்று அவர்களின் ஆதரவு மூலம் முதலமைச்சர் ஆனவர் தி.மு.க. தலைவர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் ஆனார். பின்னர் அவருக்கே துரோகம் செய்தார்.

    கொரோனா உச்சத்தில் இருந்தபோது தடுப்பூசி செலுத்திக்கொண்டு கோவையில் கொரோனா வார்டுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

    சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், ஆவின் பால் லிட்டருக்கு 2 ரூபாயும் குறைத்தவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    முதலமைச்சர் ஏற்படுத்திய மகளிருக்கு இலவச பஸ் திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் மட்டும் பெண்கள் 25 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.

    அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் மேற்படிப்புக்காக திராவிட மாடல் ஆட்சியால் செயல்படுத்தப்படும் மாதம் ரூ.1000 திட்டத்தின் கீழ் 3.50 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் பேர் பயன்பெறுகிறார்கள்.

    திராவிட மாடல் ஆட்சியின் சாதனை திட்டமான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் 31 ஆயிரம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். இதில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் 22 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். இந்த திட்டத்தை தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.

    கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைக்காக 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 1 கோடியே 18 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தகுதி வாய்ந்த அனைத்து பெண்களுக்கும் கலைஞர் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும்.

    சென்னை மிச்சாங் புயலின்போதும், நெல்லை, தூத்துக்குடி வெள்ளப்பாதிப்பின் போதும், நீட் தேர்வால் 22 மாணவர்கள் இறந்தபோதும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் பிரதமர் மோடி வரவில்லை. தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே தமிழ்நாட்டுக்கு வருகிறார்.

    கடந்த தேர்தல்களின்போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை.

    5 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் எய்ம்ஸ்க்காக ஒற்றை செங்கலை நட்டு வைத்தனர். அதையும் நான் எடுத்துக்கொண்டு வந்து விட்டேன். ஆனால் அதன் பின்னர் பா.ஜ.க. ஆளும் 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் முதலமைச்சர் சென்னையில் ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என கூறியதுடன் 10 மாதத்தில் அது கட்டி முடிக்கப்பட்டு தற்போது அது பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.

    தமிழக மக்கள் ஒன்றிய அரசுக்கு ஜி.எஸ்.டி. வரியாக 1 ரூபாய் செலுத்தினால் அதனை பிரித்து தமிழ்நாட்டிற்கு ரூ.29 பைசா மட்டுமே வழங்குகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசத்திற்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் வழங்குகிறது.

    இதனால் ஒன்றிய பா.ஜ.க. அரசு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. இதனால் பிரதமர் மோடியை இனி மிஸ்டர் 29 பைசா என்றே அழைக்க வேண்டும். எனவே மாநிலங்களுக்கு நிதி உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அரசு அமையவும், தமிழ்நாட்டில் முதலமைச்சர் கைகாட்டும் நபர் பிரதமராக வருவதற்கு இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு வரவில்லை என புகார் தெரிவித்தனர்.
    • மீதமுள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் தேர்தல் முடிந்ததும் அத்திட்டத்தின்படி உரிமை தொகை வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சில பெண்கள், தங்கம் விலை தற்போது அதிக அளவு உயர்ந்துள்ளதே? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

    தங்கம் விலையை உயர்த்தியது ஒன்றிய பா.ஜ.க. அரசுதான். தங்கம் விலைக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லையம்மா என அவரது பாணியில் நகைச்சுவையாக பதில் அளித்தார்.

    தொடர்ந்து சில பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு வரவில்லை என புகார் தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த 70 சதவீதம் பேருக்கு மாதம் ரூ.1000 கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் தேர்தல் முடிந்ததும் அத்திட்டத்தின்படி உரிமை தொகை வழங்கப்படும் என்றார்.

    • உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.
    • மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன.

    சென்னை:

    இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள தொழில் சார்ந்த ஏற்றுமதிகள், பொறியியல் சம்பந்தமான ஏற்றுமதிகள் மகப்பேறுக்கு பின் கவனிப்பு, கணினி பொருட்கள் ஏற்றுமதி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய 7 பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் மத்திய அரசின் நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.

    அதில் மாநில அரசுகள், ஒன்றிய நிர்வாகப் பகுதிகள் அனைத்தையும் குறித்த ஆய்வுகளில் நிதி ஆயோக் நிறுவனம் மாநில வாரியாக நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கைகள், வரைபடங்கள் மூலம் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழ்நாடே முதலிடம் பெற்று உள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது. பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு குறித்த 2022-23-ம் ஆண்டின் அறிக்கையை ஒன்றிய அரசின் தேசிய நிர்யாத் வெளியிட்டுள்ளது.

    இறக்குமதி - ஏற்றுமதி பதிவுகள் குறித்து 2022 - 2023-ம் ஆண்டிற்கான விவரங்களை – ஒன்றிய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நாடு முழுவதும் செய்துள்ள ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம் தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023-ம் ஆண்டுக்கான அறிக்கையில், கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் குஜராத் 12.72 புள்ளிகளையும், பிகார் 29.75 புள்ளிகளையும், உத்தரபிரதேசம் 30.03 புள்ளிகளையும் பெற்று தமிழ்நாடே முதலிடம் என்பதைப் பறைசாற்றுகிறது.

    ஆண்டு வாரி சுகாதார ஆய்வு மக்கள்தொகை ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளியியல் பிரிவு ஆய்வுகளின்படி நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக் கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம்.

    அதாவது 99 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு வெகுவாகப் பாராட்டப்பட்டு உள்ளது.

    குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது.

    மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடுகள் பற்றிய ஆய்வில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 89.9 சதவீதங்களைப் பெற்று முன்னணி மாநிலமாகத் திகழ்வதாக கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் பெரிதும் துணைபுரிவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

    இதில் தமிழ்நாடு மாநிலம் தான் அதிக அளவில் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பெருக்கி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

    வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2022-2023-ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை இதைப் புலப்படுத்தியுள்ளது.

    மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன.

    இப்படி, தமிழ்நாடு எதிலும் முதலிடமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்புக்களையும் உள்ளடக்கி வளர்ச்சியை எய்தியுள்ளதாக ஒன்றிய அரசின் ஆவணங்களே இதற்கு சாட்சியாக அமைந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் தத்துவமே இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக விளங்குவதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    • அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு இங்கு கிடையாது.
    • தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு.

    சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது, மேலவீதி பகுதியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    சாதியம் தான் என் எதிரி. என் வாழ்க்கையில் சாதிக்கு இடமில்லை. என் சினிமாக்களிலும் அப்படிதான். பிறகு, சினிமாவிற்கு ஏன் ஜாதி பெயர் வைக்கிறீர்கள் என்று கேட்கலாம். குடியின் கொடுமையைப் பற்றி நான் ஒரு குறும்படம் எடுக்க நேர்ந்தால், அதன் மையப் பாத்திரம் யாராக இருப்பான் ? ஒரு குடிகாரனாகத் தான் இருப்பான். அவன் இல்லாமல் அந்த கருத்தை சொல்ல முடியாது.

    அதுபோல், சாதி வெறியனை மையப்படுத்தி தான், படத்தின் நிறைவு கருத்தை சொல்ல முடியும். அவன் பாழான கதையையும், பண்பட்ட கதையையும் கூறுவதால் அது சாதியை உயர்த்திப்பிடிப்பது ஆகாது. விமர்சிப்பதாகும். இது பதில் அல்ல. விளக்கம்.

    ஆனால், சாதியே இல்லை என்கிறீர்கள். சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறீர்களே என்று கேட்கலாம். இன்னும் எத்தனை பேர் அடிகோட்டு விளிம்பில் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிய வேண்டும்.

    ஏனென்றால், இங்கு அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு கிடையாது. மாநிறத்தில் இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். கருப்பாக இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். அவனை எல்லாம் விடுவிக்க வேண்டும்.

    தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எப்போதும் இல்லாத அளவில் நம் மீனவர்கள் கைதாவதும், சிறையில் அடைக்கப்படுவதும் இன்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

    ஒன்றிய அரசு என்று சொன்னால் இவர்களுக்கு கோபம் வருகிறது. இவர்கள் ஒன்றிய அரசு கிடையாது. மக்களோடு ஒன்றாத அரசு.

    இதனால் தான் திருமாவளவனோடு தோள் உரசி களம் காண்கிறேன்.

    தமிழ்நாட்டின் குரலாக ஸ்டாலின் திகழ்கிறார்.. இளைஞர்களின் குரலாக தம்பி உதயநிதி திகழ்கிறார்.. குரலற்றவர்களின் குரலாக பெருஞ்சிறுத்தை திருமாவளவன் இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனராக விஞ்ஞானி நிலேஷ் தேசாய், பெங்களூருவில் யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனராக விஞ்ஞானி சங்கரன் பணியாற்றி வருகின்றனர்.
    • ஓய்வு பெற இருக்கும் இந்த 8 விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனராக விஞ்ஞானி ராஜராஜன், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு மைய இயக்குனர் விஞ்ஞானி நாராயணன், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனராக விஞ்ஞானி நிலேஷ் தேசாய், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனராக விஞ்ஞானி சங்கரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    அதேபோல், பெங்களூருவில் உள்ள மனித விண்வெளி விமான மைய இயக்குனர் விஞ்ஞானி மோகன், திருவனந்தபுரத்தில் இஸ்ரோ இன்டர்ஷியல் சிஸ்டம்ஸ் யூனிட் என்ற மையத்தின் இயக்குனராக விஞ்ஞானி பத்மகுமார் மற்றும் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் இஸ்ரோவின் ஏ.டி.ஆர்.ஐ.என். என்ற ஆய்வு கூடத்தில் விஞ்ஞானியாக ராதா தேவி மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட 'ஆதித்யா எல்-1' விண்கலத்தின் திட்ட இயக்குனர் விஞ்ஞானி நிகர் ஷாஜி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுடைய பணி காலம் இம்மாதம் (ஏப்ரல்), மே மற்றும் ஜூன் மாத்துடன் நிறைவு பெறுகிறது. ஓய்வு பெற இருக்கும் இந்த 8 விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    • பாராளுமன்ற தொகுதியில் 42 வகுப்பறைகளை கட்டியுள்ளேன்.
    • கடந்த 5 ஆண்டு காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் மூன்று மேம்பாலங்களை கட்டியிருக்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் திருச்சி, மணமேட்டில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இதுகுறித்து பாரிவேந்தர் பேசியதாவது:-

    வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்களுடைய மேலான வாக்குகளை தாமரை சின்னத்திற்கு போட்டு வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    நான் உங்களுக்கு புதியவன் அல்ல. இதே பாராளுமன்ற தொகுதிக்கு மூன்றாவது முறையாக பார்க்கிறேன். இருந்தாலும் நம்பிக்கையோடு, என்னை பற்றி மக்களுக்கு நல்ல எண்ணம் இருக்கிறது. கருத்து இருக்கிறது. ஆகவே என்னை ஒதுக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில், உங்களை நம்பி இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    2019 தேர்தலில், 6 லட்சம் வாக்குகள் கொண்டு வெற்றிப்பெற செய்தீர்கள். 6 லட்சம் வாக்கு என்பது சாதாரண வாக்கு அல்ல. 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளீர்கள்.

    வெற்றி பெற்ற நான் டெல்லிக்கு சென்று உங்கள் தொகுதிக்காக என்ன செய்தேன் என்பதை புத்தகமாக போட்டுக் கொடுத்துள்ளேன்.

    இந்த புத்தகத்தில், பாராளுமன்றத்தில் நான் எத்தனை முறை பேசினேன். எதற்காகப் பேசினேன். எத்தனை முறை பாரத பிரதமர், ரெயில்வே அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்தேன் என்பதை புத்தகத்தில் பட்டியலிட்டுள்ளேன்.

    இந்த மாதிரி யாராவது கடந்த காலங்களில் உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பள்ளி மாணவன் மதிப்பெண் அட்டையை காட்டுவது போல் கொடுத்துள்ளார்களா ? பார்த்திருக்க மாட்டீர்கள்.

    அப்படி நான் கொடுக்கிறேன் என்றால் என்ன அர்த்தம், உண்மையாக இருந்திருக்கிறேன். கேட்ட திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன். அதேபோல், எந்தெந்த ஊர்களில் என்ணென்ன பிரச்சனை இருக்கிறது என்பதை அதையெல்லாம் முழுமையாக தீர்த்து வைத்திருக்கிறேன்.

    குறிப்பாக, முசரியில் என்னுடைய நிதியில் இருந்து வகுப்பறைகள் கட்டப்பட்டது. பாராளுமன்ற தொகுதியில் 42 வகுப்பறைகளை கட்டியுள்ளேன்.

    அதேபோல, எத்தனையோ சமூக கூடங்கள், ரேஷன் கடைகள், நீர்தேக்கத் தொட்டிகள், கழிப்பறைகள் ஆகிய அத்தனையும் கட்டிக் கொடுத்திருக்கிறேன்.

    பள்ளிக்கூடத்தில் கட்டிக் கொடுத்தால் அதனால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். நான் அடிப்படையில் கல்வியாளர் என்று தெரிந்துதான் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்.

    மனிதனுக்கு வாழ்வில் கல்வி என்பது அவசியம். முதலிடம். ஆகவே தான் என் பாராளுமன்ற தொகுதிக்கு 42 வகுப்பறைகளை கட்டிக் கொடுத்திருக்கிறேன்.

    அதுமட்டுமல்ல, கடந்த 5 ஆண்டு காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் மூன்று மேம்பாலங்களை கட்டியிருக்கிறேன். 9 தரைப்பாலங்களை கட்டியிருக்கிறேன். எளிதாக யாராலும் இந்த திட்டங்களை எல்லாம் கொடுக்க முடியாது.

    திமுக திருவாளர்கள் எம்.பிக்கள் பாராளுன்றத்தை முடக்குவதற்கே முயற்சிக்கின்றனர். மோடியை குழப்புவதிலயே குறியாக இருக்கின்றனர். அந்த நிலையிலும் கூட, என்னால் இதையெல்லாம் செய்திருக்க முடிந்தது.

    அரியலூர், பெரம்பலூர், துரையூர், நாமக்கலில் ரெயில்வே பாலம் அமைக்கிற திட்டம், 50 ஆண்டு கால கனவுத் திட்டமாக இருக்கிறது. இது தொடர்பாக, பிரதமர், ரெயில்வே அமைச்சர், நிதி அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன்.

    முடியாது என்று கூறிய இத்திட்டத்திற்கு உயிர் கொடுத்து, தட்டி எழுப்பி இன்று சர்வே நடந்திருக்கிறது.

    2024 நிதி ஆண்டில் இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் யார் ஆட்சி அமைப்புது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். 10 ஆண்டுகாலமாக பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார். இந்தியாவின் பெருமையை உலகளவில் ஓங்கியிருக்கிறார்.

    மோடி எப்போது எங்கள் நாட்டிற்கு வருவார் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் எல்லாம் எங்கள் தலைவர் மோடி என்கிறார்கள். இன்னும் சொல்ல போனால்,, உலகத் தலைவர்கள் எல்லாம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எங்கள் நாட்டிற்கு கொடுங்கள், அவரை எங்கள் நாட்டில் பிரதமராக்கி விடுகிறோம் என்கிறார்கள்.

    அப்படிப்பட்ட மகானை, திறமைசாலியை, நாட்டுப்பற்று கொண்டவரை, எப்படியாவது ஊனப்படுத்த வேண்டும். அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

    நமக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு விவேக்கானந்தர் கிடைத்தார். அவர் நாட்டின் ஆன்மிகத்தை உலகளவிற்கு கொண்டு சென்றார். இன்று மோடி அவர்கள், நல்லாட்சியை அரசியலுக்கு உலகளவில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்.

    பிரதமர் மோடியின் ஆட்சியில் தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்கள் போனாலும், போகாவிட்டாலும் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறார் என்பதில் சந்தேகமே கிடையாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியாவின் நற்பெயருக்கு உலக நாடுகள் மத்தியில் களங்கம் ஏற்பட்டுள்ளது.
    • ஐ.நா. சபை, மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இடது சாரி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். திருவனந்தபுரம், நெய்யாற்றின் கரை பகுதிகளில் அவர் பேசியதாவது:-

    மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் மதச் சார்பின்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளன. இதனால் மக்களாட்சி கொண்ட மதச்சார்பற்ற நாடு என்று கருதப்படும் இந்தியாவின் நற்பெயருக்கு உலக நாடுகள் மத்தியில் களங்கம் ஏற்பட்டுள்ளது.

    ஐ.நா. சபை, மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளன. இப்படி ஒரு நிலைமை இதற்கு முன்பு இந்தியாவுக்கு ஏற்பட்டதில்லை. இது மாற்றப்பட வேண்டும். அதற்கு பாரதிய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்து அனைத்து மாநிலத்திலும் எழுந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் தடை விதித்தது.
    • மார்ச் 31-ந்தேதி வரை அமலில் உள்ள வெங்காய ஏற்றுமதி தடை, அடுத்த உத்தரவு வரும் வரை மேலும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    புதுடெல்லி:

    உள்நாட்டில் வெங்காயம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் தடை விதித்தது. இந்த தடை வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மார்ச் 31-ந்தேதி வரை அமலில் உள்ள வெங்காய ஏற்றுமதி தடை, அடுத்த உத்தரவு வரும் வரை மேலும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது' என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேநேரம் நட்பு நாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதி நிபந்தனைகளின் அடிப்படையில் அரசின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

    • பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது லிட்டருக்கு 2 ரூபாய் என்றாலும் அது சாதாரண மக்கள் மீதுள்ள பணச்சுமையைக் குறைக்க உதவும்.
    • நாடு முழுவதும் எவ்வித பாகுபாடின்றி பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 2 ரூபாயைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது லிட்டருக்கு 2 ரூபாய் என்றாலும் அது சாதாரண மக்கள் மீதுள்ள பணச்சுமையைக் குறைக்க உதவும். அது மட்டுமல்ல வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தும் விவசாயிகள் உள்ளிட்ட சாமானிய மக்கள் பணத்தைச் சேமிக்கவும் உதவும். குறிப்பாக நாடு முழுவதும் எவ்வித பாகுபாடின்றி பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும்.

    மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை நிரூபிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருப்பதால் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை பாராட்டி, வாழ்த்தி, நன்றி கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கால்நடை வளர்ப்பு ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு வெளிநாட்டு இன நாய்கள் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரைத்தது

    இந்தியாவில் பிட்புல், ராட்வீலர், புல்டாக், உள்ஃப் நாய்கள் மற்றும் டெரியர் உள்ளிட்ட ஆக்ரோஷ தன்மை கொண்ட வெளிநாட்டு இன நாய்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், வீடுகளில் ஏற்கனவே வளர்க்கப்பட்டு வரும் அத்தகைய இன நாய்களுக்கு கருத்தடை செய்யுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாய்கள் மற்றும் மனிதர்களை பாதுகாக்க வேண்டும் என பீட்டா இந்தியா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு ரிட் மனுத் தாக்கல் செய்தது. அந்த வழக்கில், இது தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளின் குழு ஒன்றை அமைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து கால்நடை வளர்ப்பு ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு வெளிநாட்டு இன நாய்கள் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • சட்டபூா்வமாக இந்திய குடியுரிமை கோருவோா், தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்.
    • அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்று தமக்குத் தெரியும் என்பதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும்.

    குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்தச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிஏஏ 2019-ன் கீழ், இந்திய குடியுரிமை கோருவோா், அதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் ஓராண்டு இந்தியாவில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். அந்த ஓராண்டுக்கு முந்தைய 8 ஆண்டுகளில் 6 ஆண்டு களுக்கு குறையாமல் விண்ணப்பதாரா் இந்தியாவில் தங்கியிருந்தால், அவா் இந்திய குடியுரிமை பெற தகுதியுடையவா்.

    சொந்த நாட்டு குடியுரிமையைக் கைவிடுவ தாகவும், இந்தியாவை தங்கள் நிரந்தர தாயகமாக்கிக் கொள்ள விரும்புவதாகவும் விண்ணப்பதாரா் உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்தியாவை பூா்வீகமாக கொண்டவா், இந்திய குடியுரிமை பெற்ற வரைத் திருமணம் செய்தவா், இந்திய குடியுரிமை பெற்ற வரின் 18 வயதுக்குட்பட்ட பிள்ளை, இந்திய பெற்றோருக்குப் பிறந்தவா், வெளிநாடு வாழ் இந்திய குடிமகன் அட்டையை வைத்திருப்பதாகப் பதிவு செய்துள்ளவா் தனி விண்ணப்பம் சமா்ப்பிக்க வேண்டும்.

    சட்டபூா்வமாக இந்திய குடியுரிமை கோருவோா், தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரரின் நடத்தை குறித்து இந்திய குடிமகன் ஒருவரின் பிரமாண பத்திரத்தையும் இணைக்க வேண்டும். இத்தகைய விண்ணப்பதாரா்கள் அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்று தமக்குத் தெரியும் என்பதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும்.

    இந்திய குடியுரிமை வழங்க அங்கீகரிக்கப்பட்டால், 'இந்திய அரசமைப்புச் சட்டம் மீது நம்பிக்கை மற்றும் விசுவாசம் கொண்டி ருப்போம்', 'இந்திய சட்டங் களை முழு நம்பிக்கையுடன் பின்பற்றுவோம்', 'இந்திய குடிமகனுக்கான கடமைகளை பூா்த்தி செய்வோம்' என்று விண்ணப்பதாரா் உறுதி மொழி ஏற்க வேண்டும். விண்ணப்பதாரரின் செல்லுபடியாகும் அல்லது காலாவதியான வெளிநாட்டு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), தங்கும் அனுமதி, வாழ்க்கைத் துணையின் இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக அவரின் இந்திய கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமா்ப்பிக்க வேண்டும். எனினும் இந்த ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டியது கட்டாயமல்ல.

    இந்திய குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறைகள் நிறைவடைந்த பின்னா், சிஏஏ 2019-இன் கீழ் இந்திய குடியுரிமை பெற்றவராகப் பதிவு செய்யப்படும் விண்ணப்ப தாரருக்கு அதற்கான எண்ம (டிஜிட்டல்) சான்றிதழ் வழங்கப்படும். ஆவண வடிவில் இந்திய குடியுரிமை சான்றிதழ் கோருவோா் அதற்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

    ×