இந்தியா

ஓட்டு போட வரிசையில் காத்து நின்ற வாக்காளர்கள் - ஓட்டு போட்ட மூதாட்டி ஒருவர் தனது செல்போன் மூலம் ‘செல்பி’ எடுத்த காட்சி.

கேரளாவில் 70 சதவீதம் வாக்குப்பதிவு: வயநாடு தொகுதியில் 72.69 சதவீத வாக்குகள் பதிவானது

Published On 2024-04-27 03:19 GMT   |   Update On 2024-04-27 03:19 GMT
  • கண்ணூர் பினராயி அரசு ஆரம்ப பள்ளியில் முதல்-மந்திரி பினராயி விஜயன் வாக்களித்தார்.
  • மலையோர பகுதிகளில் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

திருவனந்தபுரம்:

நாடு முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19-ந்தேதி 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளும் அடங்கும்.

2-வது கட்டமாக 88 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.

அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், மந்திரிகள், நடிகர்களும் ஆர்வமுடன் அவர்களுக்குரிய வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். முதியவர்களும், முதல் தலைமுறை வாக்காளர்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்ததை காணமுடிந்தது.

கண்ணூர் பினராயி அரசு ஆரம்ப பள்ளியில் முதல்-மந்திரி பினராயி விஜயன் வாக்களித்தார். எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நடிகர் மம்முட்டி ஓட்டு போட்டார்.

சில வாக்குச்சாவடிகளில் எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது. மேலும் எந்திரத்தில் சின்னம் மாறியதாலும் பிரச்சனை ஏற்பட்டது. சில இடங்களில் கள்ள ஓட்டு போடப்பட்டதாகவும் பிரச்சனை எழுந்தது.

அந்த வகையில் கண்ணூர் சப்பாரபடா வாக்குச்சாவடியில் கதீஜா என்பவரின் ஓட்டு கள்ளஓட்டு போடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு டெண்டர் ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டது. காசர்கோட்டில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் சேர்குளா அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கள்ளஓட்டு போட முயற்சிப்பதாக இடதுசாரி முன்னணி தொண்டர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.

கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் மலையோர பகுதியில் உள்ள மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் சில நாட்களுக்கு முன்பு ஊருக்குள் வந்து யாரும் வாக்களிக்கக்கூடாது என மிரட்டி சென்றனர். ஆனாலும் நேற்று பொதுமக்கள் அந்த தொகுதியில் ஆர்வமுடன் வாக்களித்ததை காணமுடிந்தது. மலையோர பகுதிகளிலும் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. இதனால் ராகுல் தொகுதியில் 71.69 சதவீதம் வாக்குகள் பதிவானது. இது கேரளாவின் மொத்த சதவீதத்தை விட அதிகம்.

இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சை கவுல் கூறுகையில், ''கேரளாவில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. மாலை 6 மணிக்கு முன்னதாக வந்தவர்கள், வாக்குப்பதிவு நேரத்தை கடந்த பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்'' என்றார்.

கேரளாவில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 49 ஆயிரத்து 159 ஆகும். இதில் மாநிலம் முழுவதும் 70.35 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

Tags:    

Similar News