செய்திகள்

ராஜஸ்தானில் 72.67 சதவீதம், தெலுங்கானாவில் 67 சதவீதம் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம்

Published On 2018-12-07 14:42 GMT   |   Update On 2018-12-07 14:42 GMT
ராஜஸ்தானில் 72.67 சதவீதமும், தெலுங்கானாவில் 67 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #Rajasthan #Telangana #AssemblyElections #ElectionCommision
புதுடெல்லி:

தெலுங்கானாவில் முதல் மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. மொத்தம் 119 இடங்களை கொண்ட சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு  மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. 

தெலுங்கானா மாநிலத்தில் 67 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதேபோல், சட்டசபை தேர்தல் நடைபெற்ற மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 200 இடங்கள் கொண்ட சட்டசபையில் ஒரே ஒரு இடத்தை தவிர 199 தொகுதிகளுக்கு இன்று  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

மாலை 5 மணியுடன் நிறைவடைந்த ராஜஸ்தானில் 72.67 சதவீத  வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இங்கு பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது. 

இதற்கிடையே ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் 11-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.  நாடாளுமன்ற கூட்டத்தொடரும் அன்றைய நாளில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #Rajasthan #Telangana #AssemblyElections #ElectionCommision
Tags:    

Similar News