ராஜஸ்தான் தேர்தல் - காங்கிரசை போல வாரிசு அரசியலுக்கு பா.ஜனதா முக்கியத்துவம்
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியல் நடத்துகிறது என பா.ஜனதா குற்றம்சாட்டி வருகிறது. தற்போது அதே நிலையை தான் பா.ஜனதாவும் மேற்கொண்டுள்ளது.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
அதில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய முக்கிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 25 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் 25 பேர் புதுமுகங்கள் என்றும், அவர்களில் பலர் தொழில் ரீதியானவர்கள் என்றும் மத்திய மந்திரி ஜெ.பி.நட்டா தெரிவித்தார். சமீபத்தில் வெளியிட்ட பட்டியலில் பழைய முகங்கள் 13 பேருக்கு ‘சீட்’ வழங்கப்படவில்லை. இவர்களுக்கு வயதாகி விட்டதாக போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால் அவர்களின் மகன் அல்லது மகள் போட்டியிட ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்று தான் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த தொழில் ரீதியானவர்களுக்கு பா.ஜனதா ‘சீட்’ வழங்கியுள்ளது. அவர்கள் மருத்துவம், சட்டம், நிர்வாகம் மற்றும் வர்த்தக துறையை சார்ந்தவர்கள் ஆவர்.
ராஜஸ்தானில் வசுந்தரா ராஜேயின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 12 மந்திரிகள் மற்றும் 11 எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா ‘சீட்’ வழங்கவில்லை. அவர்களில் வசுந்தரா ராஜேயின் உதவியாளர் யூனஸ் கானும் ஒருவர்.
ராஜஸ்தானில் எஞ்சியுள்ள 69 இடங்களுக்கு வேட்பாளரை நியமிக்கும் உரிமையை அமித்ஷாவுக்கு கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி வழங்கியுள்ளது. எனவே அவர் புதுமுகங்களுக்கு ‘சீட்’ ஒதுக்கீடு செய்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவர்கள் வாய்ப்பு மறுக்கப்பட்ட பா.ஜனதா தலைவர்களின் வாரிசுகளாக இருப்பார்கள் என்ற கருத்து நிலவுகிறது. #congress #Rajasthanelection #BJP