பாராளுமன்ற தேர்தலில் டோனி, காம்பீரை களம் இறக்க பா.ஜனதா திட்டம்
புதுடெல்லி:
2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.
இதேபோல அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் வெற்றியை பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருகிறது.
ஆனால் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பா.ஜனதா அரசு மீது அதிருப்தி நிலவுகிறது.
இந்த அதிருப்தியை சமாளிக்க பா.ஜனதா புதிய வியூகத்தை அமைத்து வருகிறது. அதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, காம்பீர் ஆகிய 2 பேரையும் நட்சத்திர பிரச்சாரகர்களாக நியமிக்க பா.ஜனதா தலைவர் அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதேநேரம் இந்த 2 பேரையும் பா.ஜனதா சார்பில் அவர்களுடைய சொந்த மாநிலத்தில் வேட்பாளர்களாக களம் இறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் தேர்தலில் போட்டியிட டோனி தயங்கி வருவதால் பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி இருப்பதால் தமிழ் நாட்டில் அவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். எனவே டோனியை பிரசாரத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் தமிழ் நாடு மட்டுமின்றி தென் இந்தியாவில் பா.ஜனதாவுக்கு கணிசமான ஓட்டுகள் கிடைக்கும் என்று அந்த கட்சி மேலிடம் கருதுகிறது. #Dhoni #Gambhir #BJP