தமிழ்நாடு

நண்பரின் தங்கையான 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 16 வயது சிறுவன்

Published On 2024-04-27 05:09 GMT   |   Update On 2024-04-27 05:09 GMT
  • மகளின் உடலில் மாற்றம் ஏற்படுவதை அறிந்த பெற்றோர், அந்த சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
  • இன்ஸ்பெக்டர் ஜோதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பண்ருட்டி:

நண்பர்கள் என்றால் உயிரையும் கொடுப்பார்கள் என்பார்கள். ஆனால், நண்பரிடம் பழகி அவரது தங்கையையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு விழுப்புரத்தில் நண்பர் உள்ளார்.

அவரது வீட்டுக்கு அச்சிறுவன் அடிக்கடி சென்று வருவார். அப்போது நண்பரின் 15 வயது தங்கையிடம் பழக்கம் ஏற்பட்டது.

நண்பரிடம் பழகுவது போல்தான் சிறுமியிடமும் பழகி வந்துள்ளார். திடீரென அவர் அந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி தனது சொந்த கிராமத்துக்கு அழைத்து வந்தார். அங்கு வைத்து அந்த சிறுமியை பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானார்.

மகளின் உடலில் மாற்றம் ஏற்படுவதை அறிந்த பெற்றோர், அந்த சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறினர். இதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அந்த சிறுமியிடம் கேட்டபோது தன்னை அண்ணனின் நண்பர்தான் கர்ப்பமாக்கினார் என்று கூறினார்.

இது தொடர்பாக பண்ருட்டி யூனியன் சமூக நல விரிவாக்க அலுவலர் காவேரிக்கு தகவல் தெரிய வர அவர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசாரிடம் கூறினார். இன்ஸ்பெக்டர் ஜோதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அவரை அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் தாய் மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் அந்த தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பண்ருட்டி பகுதியில் தொடர்ந்து இதேபோன்று சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News