செய்திகள்

நாடு திரும்பினார் மத்திய மந்திரி அக்பர்- பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை வெளியிடுவதாக தகவல்

Published On 2018-10-14 04:42 GMT   |   Update On 2018-10-14 04:42 GMT
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி அக்பர், இதுபற்றி விரைவில் விளக்க அறிக்கை வெளியிட உள்ளதாக கூறினார். #MeToo #MJAkbar
புதுடெல்லி:

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீ டூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அவ்வகையில், மீ டூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளாகியிருக்கிறார். பிரபல பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர்.

அவர் மீதான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலையும் அளிக்காமல் இருக்கிறார். அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.



இந்த பரபரப்பான சூழ்நிலையில், அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்த அக்பர் இன்று நாடு திரும்பினார். டெல்லி வந்து சேர்ந்த அவரிடம், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அதுபற்றி பேசுவதைத் தவிர்த்த அவர், பின்னர் இதுபற்றி அறிக்கை வெளியிடுவதாக கூறிவிட்டுச் சென்றார். #MeToo #MJAkbar
Tags:    

Similar News