செய்திகள்

பிரதமர் மருத்துவ திட்டத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்றால் ராகுல் குணமாகி விடுவார் - உ.பி. மந்திரி கிண்டல்

Published On 2018-09-24 06:41 GMT   |   Update On 2018-09-24 06:41 GMT
ரபேல் விமான விவகாரத்தில் ராகுல்காந்தி ஒரே கோரிக்கையை வலியுறுத்துவதால் பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்றால் குணமாகி விடுவார் என உத்தரபிரதேச மந்திரி கிண்டலாக கூறியுள்ளார். #RahulGandhi
லக்னோ:

ரபேல் போர் விமானம் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திரும்ப திரும்ப கூறி வருகிறார்.

மத்திய மந்திரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கங்கள் அளித்த போதிலும், ராகுல் ஏற்கவில்லை. பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநில மந்திரி மொசின் ராசா நேற்று ராகுல் காந்தியை கடுமையாக கிண்டல் செய்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-


பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் மிக மோசமாக விமர்சனம் செய்கிறார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் ஏற்கக்கூடியவை அல்ல.

பொதுவாக ஒரு திருடன் தான் மற்றவர்களை பார்த்து திருடன் திருடன் என்று கத்துவான் என்பார்கள். ராகுல் கதையும் அது மாதிரிதான் உள்ளது.

ராகுலின் சமீபத்திய அறிக்கைகளை பார்க்கும் போது பல்வேறு எண்ணங்கள் தோன்றியுள்ளன. அவரது மனநிலை பற்றிக்கூட சந்தேகம் வருகிறது.

பிரதமர் மோடி மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கியுள்ளார். ராகுல்காந்தி இந்த திட்டத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்றால் அவருக்கு குணமாக வாய்ப்பு உள்ளது. ராகுல் பேசும் வார்த்தைகளுக்கு அவர் சிகிச்சை பெற்றால்தான் குணமாக முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். #RahulGandhi #AyushmanBharat #PMModi #MohsinRaza
Tags:    

Similar News