செய்திகள்
ஜம்மு காஷ்மீர் எல்லை அருகே என்கவுண்டர்- பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தியது ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் இன்று எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நடந்த என்கவுண்டரில், ஒரு பயங்கரவாதியை ராணுவம் சுட்டுக்கொன்றது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பகுதியில் இந்திய ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு வீரர்கள் இன்று காலை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் இந்த சண்டை நீடித்தது.
இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். ராணுவம் தரப்பில் 2 வீரர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சண்டை நடந்த பகுதியில் கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.
இதே குப்வாரா காட்டுப்பகுதியில் கடந்த 11-ம் தேதி நடந்த சண்டையின்போது ராணுவம் தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்தார். அதற்கு அடுத்தநாள் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். #JKEncounter