செய்திகள்

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடு தழுவிய முழு அடைப்பு- அடுத்த மாதம் நடக்கிறது

Published On 2018-07-12 09:26 GMT   |   Update On 2018-07-12 09:26 GMT
பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும் காங்கிரஸ் தலைமையில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை தன்னந்தனியாக நின்று தோற்கடிக்க முடியாது என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் உணர்ந்துள்ளார்.

எனவே அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக காங்கிரசுடன் ஒத்துப்போகும் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஓரணியாக திரட்டும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

முதல் கட்டமாக தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, லோக் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் பேசி முடித்துள்ளனர். வேலை வாய்ப்பு, விலை உயர்வு, வன்முறை உள்பட பா.ஜ.க. அரசு தோல்வியை தழுவிய வி‌ஷயங்கள் அனைத்தையும் பொது பிரச்சனையாக முன் வைத்து போராட இந்த கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அடுத்த வாரம் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அந்த கூட்டத் தொடரில் ஒன்று சேர்ந்து பிரச்சனைகளை எழுப்ப இந்த கட்சிகள் முடிவு செய்துள்ளன. ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி இந்த கூட்டத் தொடர் முடியும் என்று தெரிகிறது.

பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும் காங்கிரஸ் தலைமையில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நூற்றாண்டு தினம் கொண்டாடப்பட உள்ளது.

அன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தலாம் என்று சில கட்சிகள் பரிந்துரை செய்துள்ளன. ஆனால் ஆகஸ்டு முதல் வாரத்தில் தான் நாடு தழுவிய முழு அடைப்புக்கு முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

‘‘பாரத் பந்த்’’ நடத்தி முடித்த பிறகு பெரிய மாநிலங்களில் ஒன்று சேர்ந்து பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தவும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. லாலு, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் ஆகியோரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். #Congress #BJP
Tags:    

Similar News