செய்திகள்

பள்ளிபாட புத்தகம் வாங்க சென்றபோது சுற்றுலா பஸ் மோதி கைக்குழந்தையுடன் தாய் பலி

Published On 2018-05-04 08:48 GMT   |   Update On 2018-05-04 08:48 GMT
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பள்ளிபாட புத்தகம் வாங்க மொபட்டில் சென்ற போது சுற்றுலா பஸ் மோதிய விபத்தில் தாய் மற்றும் 6 மாத கைக்குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நாரான்கோடு பகுதியை சேர்ந்தவர் அன்சாத். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அன்சாத்தின் மனைவி நிசிதா (வயது 27). இவரது மூத்த மகள் அமனபாத்திமா (3), 2-வது மகள் 6 மாத கைக்குழந்தை நிதாபாத்திமா.

நேற்று மாலை மூத்தமகளுக்கு பள்ளி பாடப்புத்தகம் வாங்க மாமனார் முகமது அலியுடன் மொபட்டில் சென்றார். தன்னுடன் 2 மகள்களையும் அழைத்துச்சென்றார்.

மொபட் வழிக்கடவு என்ற இடத்தில் வந்தபோது திருச்சூரில் இருந்து கர்நாடகாவுக்கு சுற்றுலா பஸ் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மொபட் மீது பஸ் வேகமாக மோதியது.

இதில் மொபட்டில் சென்ற 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தாய் நிசிதா, 6 மாத கைக்குழந்தை நிதாபாத்திமா ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய முகமது அலி, மூத்த மகள் அமனபாத்திமா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நிலம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழிக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News