செய்திகள்

கணவர் பாஸ்போர்ட்டில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த மனைவி - டெல்லியில் ருசிகர சம்பவம்

Published On 2018-05-02 14:27 GMT   |   Update On 2018-05-02 14:27 GMT
பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் தவறுதலாக தனது கணவரின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்து பின்னர், அதிகாரிகள் அதனை கண்டறிந்து மீண்டும் அவரை பிரிட்டனுக்கு அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.
புதுடெல்லி:

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான கீதா மோதா என்பவர் கடந்த மாதம் 23-ம் தேதி இந்தியாவுக்கு தொழில்முறை பயணமாக வர திட்டமிடப்பட்டுள்ளார். பயண நாளன்று கீதா தவறுதலாக தனது கணவரின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு விமான நிலையம் சென்றுள்ளார்.

மான்செஸ்டர் நகர விமான நிலையத்தில் அவர் தவறான பாஸ்போர்ட்டை கொண்டு வந்துள்ளது குறித்து எந்த அதிகாரியும் கண்டறியவில்லை. இதனை அடுத்து, அவர் டெல்லி வந்து இறங்கிய பின்னர் விண்ணப்பம் ஒன்று பூர்த்தி செய்யும் போது, இந்திய அதிகாரிகள் தவறை கண்டறிந்தனர்.

இதனை அடுத்து, கீதாவை இந்தியாவுக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அவர் மீண்டும் துபாய் செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். இதன் பின்னர், மான்செஸ்டர் நகரத்தில் இருந்து தனது பாஸ்போர்ட் வரும் வரை கீதா துபாய் விமான நிலையத்தில் காக்க வைக்கப்பட்டார்.

விமான நிறுவனத்தின் கவனக்குறைவே இதற்கு காரணம் என மான்செஸ்டர் விமான நிலைய அதிகாரிகள் சமாளிக்க, தற்போது இது தொடர்பாக விசாரிக்க எமிரேட்ஸ் விமான நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

Similar News