செய்திகள்

முன்னாள் எம்.பி.க்களுக்கான சலுகையை ரத்து செய்யக்கோரிய மனு - சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

Published On 2018-04-16 15:27 GMT   |   Update On 2018-04-16 15:27 GMT
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பென்சன் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:

தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றை சேர்ந்த லோக் பிரஹரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், ‘‘எம்.பி.க்களாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம் மற்றும் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

பதவியில் இல்லாதவர்களுக்கு இதுபோல் சலுகைகள் வழங்குவது அரசியல் சட்டத்தின் 14–வது பிரிவிற்கு முரணாக உள்ளது. எனவே முன்னாள் எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தையும் சலுகைகளையும் நிறுத்தவேண்டும். வரிசெலுத்துவோரின் பணத்தை தேவையின்றி முன்னாள் எம்.பி.க்களுக்கு கொடுப்பதை கைவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இதுபற்றி மத்திய அரசு, தேர்தல் கமி‌ஷன், பாராளுமன்றம் மற்றும் டெல்லி மேல்–சபை தலைமை செயலாளர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் எம்.பி.க்களும் ஓய்வூதியம் பெற தகுதியானவர்களே என அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #TamilNews
Tags:    

Similar News