காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட சித்தராமையா முடிவு
பெங்களூரு:
காவிரி நதிநீர் வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் 16-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு தண்ணீரின் அளவை குறைத்தது. காவிரி நதி யாருக்கும் சொந்தம் இல்லை என்றும் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்து கட்சியினரும கலந்து கொண்டனர். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்த பிரதமரை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
தமிழக அரசு பாணியில் கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளார். இந்த கூட்டத்துக்கு விவசாய சங்க பிரதிநிதிகளையும் அழைப்பது என்றும் அவர் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து கர்நாடக அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:-
ஆரம்பம் முதலே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் அது சித்தராமையாவின் அரசுக்கு பெரும் அவப் பெயரை ஏற்படுத்தும்.
மேலும் அவர் விவசாயிகளின் கோபத்தை சம்பாதிக்க வேண்டிய நிலையும் ஏற்படும். இதனால் முதல் மந்திரி சித்தராமையா விரைவில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு எடுத்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #siddaramaiah #cauverymanagementboard