செய்திகள்

மதில் சுவருக்கு காவி நிறம்: ஹஜ் கமிட்டி தலைவரை அதிரடியாக நீக்கி உ.பி. அரசு உத்தரவு

Published On 2018-01-16 14:37 GMT   |   Update On 2018-01-16 14:37 GMT
லக்னோ நகரில் உள்ள ஹஜ் கமிட்டி அலுவலகத்தின் மதில் சுவருக்கு காவி நிறமும் பின்னர் வெள்ளை நிறமும் அடித்ததாக எழுந்த சர்ச்சையால் ஹஜ் கமிட்டி தலைவரை அதிரடியாக நீக்கி உ.பி. அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் பள்ளிகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிகுகூட பைகள், பேருந்துக்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்தும் காவி வர்ணத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டு வந்தது.

லக்னோவில் உள்ள ஹஜ் இல்லத்தின் வெளிப்புற சுவரில் காவி வர்ணம் பூசப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. மாநில தலைமை செயலகத்திற்கு எதிராக உள்ள ஹஜ் இல்லம் காவியாக காட்சி அளித்தது பல்வேறு தரப்பிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
 
அனைத்து தரப்பிலும் இருந்து பா.ஜனதா அரசு எதிர்ப்பை சந்தித்த நிலையில் மாநில இஸ்லாமிய வக்ப் வாரியம் மற்றும் ஹஜ்துறை மந்திரி மோஷின் ராசா இதனை நியாயப்படுத்தினார்.

பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்ததும் உத்தரபிரதேச மாநில அரசு 24 மணி நேரத்தில் மதில் சுவரின் நிறத்தை மீண்டும் வெள்ளையாக்கியது. இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஹஜ் அலுவலகத்திற்கு வெளியே சுற்று சுவரில் காவி வண்ணம் பூசப்பட்டது மற்றும் மீண்டும் வெள்ளை நிற வண்ணம் பூசப்பட்டது தொடர்பாக விளக்கம் கோரி ஹஜ் கமிட்டியின் செயலாளர் ஆர்.பி. சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஹஜ் அலுவலகத்திற்கு வண்ணம் பூசுவதற்கு பின்பற்றப்படும் விதிமுறைகள் என்ன? முதலில் யாருடைய உத்தரவின் கீழ் ஹஜ் அலுவலகத்திற்கு காவி வண்ணம் பூசப்பட்டது? காவி வண்ணம் பூசப்பட்ட பின்னர் எந்த சூழ்நிலையில் மீண்டும் நிறம் மாற்றப்பட்டது? இதற்கு யார் உத்தரவிட்டது?

இரண்டாவது பூசப்பட்ட நிறத்திற்கான செலவுகு யார் பொறுப்பு? இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து பத்திரிகைகளுக்கு ஹஜ் கமிட்டியின் செயலாளர் ஆர்.பி. சிங் ஊடகங்களுக்கு செய்திகுறிப்பு அனுப்பியது ஏன்? என்பன உள்ளிட்ட 7 கேள்விகள் அடங்கிய நோட்டீஸை ஹஜ் கமிட்டியின் செயலாளருக்கு இஸ்லாமிய வக்ப் வாரியம் மற்றும் ஹஜ்துறை அமைச்சகம் சமீபத்தில் அனுப்பியது.

இந்நிலையில், மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் கூடுதல் இயக்குனர் மற்றும் ஹஜ் கமிட்டியின் செயலாளராக பணியாற்றிவரும் ஆர்.பி.சிங் ஹஜ் கமிட்டியின் செயலாளர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டதாக சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் முதன்மை செயலாளர் மோனிகா கார்க் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.

ஹஜ் கமிட்டியின் புதிய செயலாளராக சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் உதவி இயக்குனர் வினீத் ஸ்ரீவத்சவ் என்பவர் பொறுப்பேற்று கொள்வார் என்றும் அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News