செய்திகள்
தேர்தல் விதிமுறைகளை மீறிய வழக்கு: உ.பி. பா.ஜ.க. எம்.பி.க்கு ஒரு மாதம் சிறை
பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் பா.ஜ.க. எம்.பி.க்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் டொமாரியாகஞ்ச் தொகுதி மக்களவை எம்.பி.யாக இருந்து வருபவர் ஜகதாம்பிகா பால். இவர் கடந்த 2014, பாராளுமன்ற தேர்தலின் போது உத்தரப்பிரதேசம் மாநிலம் பான்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது தேர்தல் ஆணையம் அனுமதித்த அளவைவிட அதிக எண்ணிக்கையிலான வாகனங்களுடன் சென்று பிரசாரம் செய்தார்.
இதையடுத்து, அவர்மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பான்சி கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சஞ்சய் சவுத்ரி, தேர்தல் விதிமுறைகளை மீறிய வழக்கில் ஜகதாம்பிகா பாலுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், 100 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து சில மணி நேரங்களில் ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.